பசுமைத் தீவாய் உருவெடுக்கும் கோயில் நகரம் ராமேஸ்வரம்- விவேகானந்த கேந்திரா திட்டம்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தை விரைவில் பசுமைத் தீவாக மாற்ற கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா தீர்மானித்துள்ளது.
இதற்காக ராமேஸ்வரம் நகராட்சி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து புதிய திட்டம் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக விவேகானந்தா கேந்திராவின் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
"முதல் கட்டமாக ராமேஸ்வரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட வீடுகள்தோறும் இரண்டு பிளாஸ்டிக் வாளிகளை தந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக சேமித்து அப்பகுதியின் மண்வளத்தை பேணிப் பாதுக்காக முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் தீவில் கிணறு, குளம், குட்டைகள் என 66 புனித தீர்த்தவாரிகள் முன்னர் இருந்தன. அவற்றில் 22 நீர்நிலைகள் கோயில்களுக்குள் அமைந்து உள்ளன. மீதி இருந்த தீர்த்தவாரிகள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
அந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றி, தீர்த்தவாரிகளை தூர்வாரி, தூய்மைப்படுத்தி, சுத்தமான நீரை நிரப்பி பராமரிக்க உள்ளோம். இதில் முதல் கட்டமாக ராமர் தீர்த்தத்தை தூர்வாரி, தூய்மைப்படுத்த உள்ளோம் "என்று அவர் தெரிவித்துள்ளார்.