புதுச்சேரி சட்டப்பேரவையில் செப்.11-ல் பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில அரசு சார்பில் வரும் 11-ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
ஆண்டுதோறும் புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் நடைபெறும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடந்ததால் கடந்த மார்ச் 12-ம் தேதி ஒரு நாள் சட்டப்பேரவை கூடி 6 மாத செலவினங்களுக்கான ரூ.2,550 கோடிக்கு அனுமதி பெறப்பட்டது.
அதே போல் கடந்த ஜூலை 21-ம் தேதி புதுச்சேரி திட்டக்குழுக் கூட்டம் துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் 2014-15-ம் ஆண்டுக்கு ரூ.2,400 கோடி திட்ட ஒதுக்கீடாக பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இத்தொகை கடந்த 2013-14-ஐ காட்டிலும் ரூ.400 கோடி அதிகமாகும். இத்தொகை தொடர்பாக மத்திய திட்டக்குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற வேண்டும்.
இதுதொடர்பாக புதுவையில் இருந்து முதல்வரோ அல்லது அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ சென்று திட்டக்குழு அதிகாரிகளை சந்தித்திருக்க வேண்டும். திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா பதவி விலகிவிட்டதால் அதிகாரிகளே இத்தொகைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிகிறது.
இதனிடையே வரும் 8-ம் தேதி புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக பேரவை செயலர் அறிவித்தார். துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் உரையாற்றுகிறார். முதல்வர் ரங்கசாமி வரும் 11-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடத்தப்படும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். குறைந்தது இரு வாரங்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.