தெருவில் போவோரை துரத்திக் கடித்த வெறிநாய்கள் – 15 பேர் படுகாயம்- ஒரு நாய் அடித்துக் கொலை!
செஞ்சி: செஞ்சியில் நேற்று வெறிநாய்கள் சேர்ந்து தெருவில் போவோர், வருவோரை எல்லாம் துரத்தி, துரத்தி கடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
செஞ்சி அருகே அமைந்துள்ள ஊரானது ஆலம்பூண்டி. இங்குள்ள கடைவீதியில் 2 வெறிநாய்கள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன.நேற்று மதியம் திடீர் என்று அவ்விரு நாய்களும் கடைவீதிக்கு வந்தவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தன.
இதனால் பயந்துபோன அனைத்து மக்களும் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். எனினும் விடாமல் 2 நாய்களும் துரத்திச் சென்று 15 பேரைக் கடித்துத் துவம்சம் செய்தன.
இதில் படுகாயம் அடைந்த 6 பேர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காலில் அதிக காயம் அடைந்த கோவிந்தம்மாள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதற்கிடையே வெறி நாய்களை அடித்து கொல்வதற்காக பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கையில் கம்புகளுடன் நாய்களை விரட்டி சென்றனர். அதில் ஒரு நாயை மடக்கி அடித்து கொன்றனர். ஆனால், மற்றொரு நாய் தப்பித்து ஓடிவிட்டது.