அதிகரிக்கிறது “பச்சரிசி” பயன்பாடு- ஆனால் ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு
சேலம்: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பச்சரிசி வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. ஆனால் ரேஷன் கடைகளில் பச்சரிசிக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் வினியோகிக்கும் புழுங்கல் அரிசி பழுப்புநிறத்தில் காணப்படுகிறது. மேலும் சமைத்தாலும் சாதம் பெரிது பெரிதாக இருக்கும்.
இருப்பினும், ரேஷன் அரிசியை வாங்கும் பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள், அந்த அரிசியை இட்லி மாவாக அரைத்து பயன்படுத்துகின்றனர்.
பளபளப்பான பச்சரிசி:
சேலம் மாவட்ட கிராமப்புறங்களில் கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் பச்சரிசி, வெள்ளை நிறத்தில் பளபளப்பாகவும், சமைத்தால் சாப்பாடு சன்னமாக ருசி மிகுந்தும் காணப்படுகிறது.
மவுசு கூடிய பச்சரிசி:
அதனால், ரேஷன் கடை பச்சரிசிக்கு தற்போது மவுசு கூடியுள்ளது. ரேஷன் கடையில் பச்சரிசி வாங்குவதற்கு பொதுமக்கள் முண்டியடித்து வருகின்றனர்.
நீண்ட வரிசையில் மக்கள்:
ரேஷன் கடையில் அரிசி வினியோகிக்கும் தினத்தன்று அதிகாலை நேரத்திலேயே ரேஷன்கடையை முற்றுகையிடும் குடும்ப அட்டை தாரர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பச்சரிசியை வாங்கி செல்கின்றனர்.
பச்சரிசிக்கு தட்டுப்பாடு:
கிராமப்புற ஏழை எளியோர் மட்டுமின்றி, நடுத்தர மக்களும் ரேஷன் கடை பச்சரிசியை வாங்கி பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால், ரேஷன் கடையில் பச்சரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தரமான பச்சரிசி விநியோகம்:
எனவே, அனைத்து பகுதிக்கும் இரு மாதத்திற்கு ஒரு முறையாவது தட்டுபாடின்றி தரமான பச்சரிசி விநியோகிக்க, தமிழக அரசு முன்வரவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.