கைது செய்தால் சிறைக்கு செல்ல தயார்: ஆம் ஆத்மி வேட்பாளர் உதயகுமார்
கன்னியாகுமரி: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி போலீசார் கைது நடவடிக்கை எடுத்தாலும் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் என்று அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளரும் கன்னியாகுமரி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளருமான உதயகுமார் காட்டமாக தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு ஒருங்கிணப்பாளரும், கன்னியாகுமரி வேட்பாளருமான உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வருபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வாபஸ் பெற கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அணு உலை எதிர்ப்பாளர்களை கைது செய்ய கூடாது என்றும் வழக்குகளை வாபஸ் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு 248 வழக்குகளை மட்டும் வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளது. மேலும் 101 வழக்குகள் வாபஸ் பெறாமல் இருக்கின்றன.
இது உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிப்பது போன்றது. மக்கள் நலனுக்காக போராடும் எங்களை தமிழக அரசு வஞ்சிப்பது வேதனையானது.
தமிழக மக்களின் கருத்தை இந்த அரசு தொடர்நது புறக்கணித்து வருகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தும் எங்களை உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கைது நடவடிக்கை எடுத்தாலும் சிறைக் கூடத்துக்கு செல்ல தயாராக இருக்கிறோம் என்றார்.