நீ போட்டா நானும் போடுவேன்.. மாறி மாறி 'தலைகள்' பறக்கும் பயங்கரம்.. கொலைநகராகும் சென்னை!
சென்னை: சென்னையில் மீண்டும் பழிக்குப் பழி கொலைகள் நடக்க ஆரம்பித்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சமீபத்தில் கேட் ராஜேந்திரன் என்ற முன்னாள் தாதா கொலை செய்யப்பட்ட விதம் மக்களிடையே மட்டுமல்லாமல் போலீஸார் மத்தியிலும் கூட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைவிரித்தாடிய தாதாக்களை வேரறுத்து விட்டதாக போலீஸ் மார் தட்டிக் கூறினாலும் கூட சத்தமில்லாமல் பல தாதாக்கள் பேஜாரோக்கள், லேன்ட்ரோவர்கள், இன்னோவாக்களில் சுற்றியபடிதான் உள்ளனர். சுமோவை விட்டு விட்டு, வேட்டியை கழற்றி விட்டு மாடர்ன் ரவுடிகளாக மாறியுள்ளனர் சென்னை ரவுடிக்கள்.
பழிக்குப் பழி கொலைகளிலும், கூலிக்குத் தலையை அறுக்கும் வேலையிலும் இப்போது தாதாக்களும், ரவுடிகளும் பிசியாக இறங்கியிருப்பது காவல்துறைக்கு சவாலாக மாறியுள்ளது. கேட் ராஜேந்திரன் கொலை அதைத்தான் காட்டுகிறது.
வட சென்னை- தென் சென்னை.. மத்தியில் ரவுடிகள்!
வட சென்னையில்தான் ரவுடிகள், தாதாக்கள் அதிகம் என்று கூறுவார்கள். ஆனால் ஒரு காலத்தில் தென் சென்னையிலும் கொடூர தாதாக்கள் வாழ்ந்து வந்தனர். சென்னை மக்கள் இந்த இரு பிரிவு தாதாக்கள் மத்தியிலும் சிக்கித் தவித்த காலம் அது.
வீரமணி- சேரா - வெள்ளை ரவி
வட சென்னையை முன்பு கலக்கி வந்த தாதாக்கள் வெள்ளை ரவி, ஆசைத்தம்பி, கபிலன், சேரா ஆகியோர். தென் சென்னையில் அயோத்திகுப்பம் வீரமணி, பங்க் குமார் உள்ளிட்டோர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
அடுத்தடுத்து வேட்டை
ஆனால் இந்த தாதாக்களை அடுத்தடுத்து போலீஸார் வேட்டையாடினர். வீரமணி கடற்கரையில் வைத்துப் போட்டுத் தள்ளியது போலீஸ். ஆசைத்தம்பியும் வீழ்த்தப்பட்டார். சேரா காலி செய்யப்பட்டார். பங்க் குமார் வேட்டையாடப்பட்டார். வெள்ளை ரவி வீழ்த்தப்பட்டார். கபிலன் உள்ளிட்டோரும் தூக்கப்பட்டனர். சென்னை ஒரு நல்ல நாளில் தாதாக்கள் இல்லாத நகரமாக மாறி நின்றபோது மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
பழிக்குப் பழியில் காலியான காட்டான் சுப்ரமணியம் - கேட் ராஜேந்திரன்
ஆனால் போலீஸின் பிடியில் சிக்காமல் பல தாதாக்கள் தப்பினர். தலைமறைவானார்கள் அல்லது திருந்தி வாழ ஆரம்பித்தனர். இதில் காட்டான் சுப்ரமணியம் என்ற பயங்கர தாதாவை அவரது எதிரிகள் வெட்டி வீழ்த்தினர். இப்படித்தான் சமீபத்தில் கேட் ராஜேந்திரனையும் எதிரிகள் பழி தீர்த்துள்ளனர்.
பட்டப் பகலில் நடந்த வேட்டை
கட் ராஜேந்திரன் என்ற பெயர் இந்த ரவுடிக்கு வந்தது பெரிய கதை. அதாவது ரயில்வே கேட் பக்கத்தில் அமர்ந்து இவர் பல பஞ்சாயத்துக்களை நடத்துவர், கொலைக்கான ஸ்கெட்ச் போடுவார். இதனால்தான் இவருக்கு கேட் ராஜேந்திரன் என்ற பெயர் வந்ததாம். இவரை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் வைத்து ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ளது எதிரிக் கும்பல்.
குடிசைக்குள் வைத்து சரமாரி வெட்டு
கேட் ராஜேந்திரனுக்கு சர்க்கரை நோய் இருந்ததால் ரவுடித்தனத்தை மூட்டை கட்டி விட்டு பெரியபாளையத்தில் வசித்து வந்தார். அவரது பலவீனம் எதிரிகளுக்கு வசதியாகப் போகவே பட்டப் பகலில் வைத்து அவரை வேட்டையாடி விட்டனர்.
தொடரும் பழிக்குப் பழிக் கொலைகள்
சென்னையில் இப்படி பழிக்குப் பழியாக கொலைகள் நடப்பது மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் கூட இப்படித்தான் பிரகாஷ் என்ற ரவுடியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து எதிரிகள் வெட்டிக் கொன்றனர். இப்போது கேட் ராஜேந்திரன். இப்படி தொடர் ரவுடிகள் மோதலால் மக்கள் நிம்மதியை இழந்து நிற்கின்றனர்.
அம்மா ஆட்சியில்
கடந்த காலங்களில் வீரமணி, வெங்கடேச பண்ணையார் உள்பட பல தாதாக்கள் போட்டுத் தள்ளப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். தற்போதும் அதிமுக ஆட்சிதான் நடக்கிறது. அதே ஜெயலலிதாதான் முதல்வராகவும் இருக்கிறார். எனவே மீண்டும் ரவுடிகள் மீது அரசு வேட்டை நடத்தி அவர்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்வார்களா.. அவர்கள் செய்வார்களா...!