ஏப்ரல் 14க்கு பின் அனைத்தும் சரியாகிடும்: அழகிரியை சந்தித்த எஸ்.வி. சேகர் ஆருடம்
மதுரை: ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு அழகிரிக்கு அனைத்தும் சரியாகிவிடும் என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் எஸ்.வி. சேகர் மதுரையில் மு.க. அழகிரியை இன்று காலை சந்தித்து பேசினார். அழகிரியை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
நாடகம்
சிவகாசியில் நாடகம் நடத்த செல்லும் வழியில் அழகிரியை சந்திக்க வந்தேன். அரசியலை தாண்டி அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். என்னை பாஜகவில் முழுமையாக ஏற்கவில்லை. இந்நிலையில் நாங்கள் சந்தித்து பொது விஷயங்களை பற்றி பேசினோம்.
நட்பு
டெல்லியில் உள்ளதை போன்று அரசியல் வேறு, நட்பு வேறு என்ற அடிப்படையில் தான் நான் அழகிரியை சந்தித்தேன். இதுவரை எனது நாடகத்தை காண முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பொன். ராதாகிருஷ்ணன், அழகிரி, ஸ்டாலின் என அனைவரும் வந்திருக்கிறார்கள். இது தான் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.
அழகிரி
என்னுடைய மோதி விளையாடு பாப்பா நாடகத்தை பார்க்க வருமாறு அழகிரியை அழைத்தேன். வரும் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு அழகிரிக்கு அனைத்தும் சரியாகிவிடும். இதை நான் ஒரு ஜோதிடர் மற்றும் நண்பர் என்ற முறையில் தெரிவிக்கிறேன்.
ஜோதிடம்
ஜோதிட கட்டத்தில் கிரகங்கள் நன்றாக இருக்கையில் யாரும் அழகிரியை கட்டம் கட்ட முடியாது. அவ்வாறு கட்டம் கட்டினாலும் அவை விலகிவிடும்.
மகிழ்ச்சி
அழகிரி தற்போது மகிழ்ச்சியாக உள்ளார். கட்சி பொறுப்பில் இருந்து அவரை நீக்கலாம். ஆனால் கருணாநிதியின் மகன் என்பதை யாராலும் நீக்க முடியாது. ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் அண்ணன் என்பதையும் நீக்க முடியாது. அவர்கள் குடும்பத்தில் நான் சமரசம் ஏற்படுத்த முயலவில்லை. அவர்கள் என்றாவது ஒரு நாள் நிச்சயம் இணைவார்கள். பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மோடி பிரதமர் ஆவார் என்றார் எஸ்.வி. சேகர்.