சேலத்தில் 4 வயது சிறுவனை நரபலி கொடுக்க முயற்சி- சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் கைது!
சேலம்: சேலம் அருகே கோயிலில் 4 வயது சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சிறுவனின் தந்தை உள்பட 4 பேரை மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்து உள்ள கோனகாபாடி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த கிராமத்தின் மத்தியில் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு சிறுவனின் கதறல் சத்தம் கேட்டது. இதையடுத்து கிராம மக்கள், கோயிலுக்கு சென்று பார்த்தனர்.
கோயில் முன்புள்ள வேல் கம்பில் 4 வயது சிறுவனை ஒருவர் குத்த முயன்றதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மக்களை கண்டதும், அந்த நபரும், உடன் வந்த பெண் உள்பட 3 பேரும் ஓட்டம் பிடித்தனர்.
மக்கள் சுதாரித்துக் கொண்டு விடாமல் துரத்தி சென்று அனைவரையும் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனின் தந்தையே அவனை நரபலி கொடுக்க வந்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.