நில ஆக்கிரமிப்புப் பிரச்சினை... தலைமைச் செயலகம் முன்பு தீக்குளித்த கூலித் தொழிலாளி
சென்னை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று சென்னைத் தலைமைச் செயலகம் முன்பு தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் பிச்சிப்பாளையம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி என்ற பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர் (54). இவருடைய நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சேகர் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகார் தொடர்பாக சேலம் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொட்ர்பாக, சென்னை கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் மனுகொடுப்பதற்காக நேற்று சென்னைக்கு வந்துள்ளார் சேகர். சென்னை போர் நினைவுச்சின்னம் பகுதியில் இருந்து தன் மீது மண்எண்ணெய் ஊற்றியவாறு நடந்து சென்று கொண்டிருந்த சேகரை, வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தவாறு சென்றுள்ளனர். யாரும் தடுக்க முற்படவில்லை.
இந்நிலையில், தலைமைச் செயலகம் முன்பு சென்ற சேகர யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தன் உடலில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டார். வலியால் அலறித் துடித்தபடி, அங்கும் இங்கும் ஓடிய சேகரைக் கண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
விரைந்து சேகரின் தீயை அணைந்த போலீசார், சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 50 சதவீத தீக்காயத்துடன் சேகர் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நில அபகரிப்பு தொடர்பான பிரச்சினையில் சொந்த ஊரில் உள்ள ஒருவரை சேகர் கத்தியால் குத்தியுள்ளார். இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் அவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.