சேலம்: பள்ளி மாணவி பலாத்காரம்- இளைஞரிடம் போலீஸ் விசாரணை!
சேலம்: சேலத்தில் 9-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞர் பிடிபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அவரை பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பரணி. இவர், அதே பகுதியில் 'பிரெளசிங்' செண்டர் நடத்தி வருகிறார். அவரது பிரெளசிங் செண்டருக்கு அடிக்கடி சென்று வந்த மாணவி ஒருவரை, தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற பரணி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை, அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அதையடுத்து, அவர்கள் பரணியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தற்போது பரணியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 வயது சிறுமி
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஏமாற்றிய சிறுவன்
வீட்டின் அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அதே தெருவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன், ஏமாற்றி அருகில் இருந்த மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பாலியல் தொந்தரவு
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றதும் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுமி இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
சிறுமி மீட்பு
உடனே சிறுமியின் பெற்றோர் பதறியடித்தபடி சம்பவ பகுதிக்குச் சென்றுள்ளனர். அதற்குள் சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறுமியை மீட்ட பெற்றோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
சிறுவன் கைது
இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர், சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
தொடரும் சம்பவங்கள்
இரண்டு நாட்களுக்கு முன்பு ராயக்கோட்டை அருகே கல்லூரி மாணவி ஒருவரை 4 பேர் பலாத்காரம் செய்தனர். இந்நிலையில் சிறுமிக்கு இப்படியொரு நிலை ஏற் பட்டிருப்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.