தமிழகத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் விருப்ப மனு வாங்கும் படலம் ஆரம்பம்
திருச்சி: சமாஜ்வாடி கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோ யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள், விருப்ப மனுக்களை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள ராஜா ஹோட்டல் மாடியில் இளங்கோ யாதவ் தலைமையிலான கட்சி மாநில தேர்தல் பணிக் குழுவினரிடம் பிப்ரவரி 27ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை அளிக்கலாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமாஜ்வாடி கட்சி திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றதா அல்லது தேசிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதா அல்லது மிக தைரியமாக தனியாகவே களம் காண உள்ளதா என இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.