கச்சத்தீவு வழக்கு: ஜெயலலிதா, கருணாநிதி மனுக்களை சேர்த்து விசாரிக்க முடிவு
சென்னை: கச்சத் தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி திமுக தலைவர் கருணாநிதி சார்பில் தாக்கல் செய்த மனுவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் கச்சத் தீவை மீட்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதே போன்றதொரு மனுவை கருணாநிதியும் தாக்கல் செய்திருந்தார். இம்மனுக்கள் மீது இதுவரை தனித்தனியாக விசாரணை நடைபெற்று வந்தது.
இதில் கருணாநிதி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து, எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கருணாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வெங்கட்ரமணி, வி.ஜி. பிரகாசம் ஆகியோர் கச்சத்தீவை மீட்கக் கோரி முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2008-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இருக்கிறது என்றனர்.
இந்த வழக்குடன் கருணாநிதியின் வழக்கையும் சேர்த்து விசாரிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்ற நீதிபதிகள், இரண்டு வழக்குகளும் ஒரே வழக்காக விசாரிக்கப்படும் என அறிவித்தனர்.