பதவி நீக்கப்பட்ட 83 அதிகாரிகள் தமிழக அரசுப் பணியில் தொடரலாம்: உச்ச நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாட்டில் குரூப் 1 தேர்வு முறைகேடு விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட 83 அதிகாரிகளும் பணியில் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் புதன் கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2005-ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் 83 பேரையும் பணி நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை கடந்த ஜூன் 30-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு, உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் 83 அதிகாரிகளின் நியமனங்களை ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து இத்தீர்ப்பில் விளக்கம் கேட்டு டி.என்.பி.எஸ்.சி. மற்றும் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பி.என்.பி.எஸ்.சி. தாக்கல் செய்திருந்த மனுவில், "மொத்தமுள்ள 747 விண்ணப்பதாரர்களில் 746 பேரின் விடைத்தாள்களில் விதிமீறல்கள் இருந்தன.
விடை அளிப்பதற்கு பென்சில் மற்றும் பந்துமுனை பேனா பயன்படுத்துவதற்கு தடை ஏதும் விதிக்கப்பட வில்லை. மேலும் கேள்விக்குரிய சரியான விடையை மதிப்பிடுவதில் இருந்து விடைத்தாள் திருத்துவோர் தடுக்கப்படவில்லை" என்று கூறப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், "10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ள நாங்கள் ஜூன் 30-ம் தேதி தீர்ப்பு மூலம் வேலை இழப்பதுடன், வயது முதிர்வு காரணமாக வேறு அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்க முடியாது" என்று கூறப்பட்டிருந்தது.
இம்மனு அதே நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, "10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அதிகாரிகள் பணியாற்றியுள்ள நிலையில், அவர்களை பணியில் இருந்து நீக்குவது நீதிக்கு புறம்பானது" என்றார்.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி வாதிடுகையில், "தீர்ப்பில் சில அம்சங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவில்லை" என்றார்.
தொடர்ந்து இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நீக்கப்பட்ட 83 பேரும் பணியில் தொடர இடைக்கால உத்தரவிட்டனர்.