94 குழந்தைகள் பலி: கணவருக்கு ஆயுள்- கண் கலங்கிய சரஸ்வதி
தஞ்சாவூர்: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் நீதிபதி வாசித்த தீர்ப்பை கேட்டதும் பள்ளி நிறுவனர் பழனிச்சாமியின் மனைவியும், பள்ளித் தாளாளருமான சரஸ்வதி நீதிமன்ற வளாகத்தில் கண் கலங்கினார்.
கும்பகோணம் காசிநாதன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 16.7.2004 அன்று காலை 10.30 மணியளவில் சமையல் அறையில் பற்றிய தீ மேலே இருந்த வகுப்பறைகளுக்கும் பரவி 94 குழந்தைகளின் உயிரைப் பறித்தது. மேலும், 18 குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட 24 பேர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் 5.7.2005 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த எம்.பழனிச்சாமி, வட்டாட்சியராக இருந்த எஸ்.பரமசிவம், தொடக்கக் கல்வித் துறை இயக்குநராக இருந்த ஆர்.கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு ஒவ்வொரு நீதிமன்றமாக மாறிக்கொண்டே இருந்ததால் வழக்கு விசாரணை தடைபட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போதுதான் இந்த வழக்கு இன்னும் முடிவடையாதது உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து வழக்கை இந்த ஆண்டு ஜூலை 31-க்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஜூலை 30ல் தீர்ப்பு
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி முகம்மது அலி முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணை ஜூலை 17-ல் முடிவுற்றது. இந்த வழக்கில் ஜூலை 30-ல் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
11 பேர் விடுதலை
இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 21 பேரும் தீர்ப்பு நாளான புதன்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜராயினர். முதலில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் விடுவிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி முகம்மது அலி, 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, தண்டனை விவரம் பின்னர் வழங்கப்படுமென கூறி, தீர்ப்பை ஒத்திவைத்தார்.
காத்திருந்த 10 பேர்
ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நீதிமன்ற அறையிலேயே 10 பேரும் அமர்ந்திருந்தனர். பின்னர் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அப்போது குற்றவாளிகள் அனைவரும் எழுந்து நின்றனர். தீர்ப்பை வாசித்த பின்னர் நீதிபதி தனது அறைக்குச் சென்றுவிட்டார்.
ஆயுள் தண்டனை
தனது கணவருக்கு ஆயுள் தண்டனையும், தனக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டதை அறிந்ததும் சரஸ்வதி கண் கலங்கினார். பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரின் முகங்களும் சோகமாகவே காட்சியளித்தன. தனக்கு வேண்டியவர்கள் மற்றும் உறவினர்களிடம் மிகுந்த சோகத்துடனேயே பழனிச்சாமி பேசினார்.
சோகம் அப்பிய முகங்கள்
நீதிமன்றத்திலிருந்து நேராக சிறைக்கு செல்வதால், தனது கைப்பையில் இருந்த வீட்டுச் சாவி உள்ளிட்டவைகளை தனது உறவினரிடம் சரஸ்வதி ஒப்படைத்தார்.
திருச்சி சிறையில் அடைப்பு
பிற்பகல் 2.30 மணிக்கு அனைத்தும் முடிந்துவிட்டாலும், சிறையில் அடைப்பதற்கான உத்தரவு உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைகளை முடித்துவிட்டு, மாலை 6 மணிக்கு 9 பேரும் (கட்டிடப் பொறியாளர் ஜெயச்சந்திரன் தவிர) வேன்களில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மருத்துவப் பரிசோதனைகளை முடித்த பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீர்ப்பு குறித்து பள்ளி நிர்வாகத் தரப்பினரிடம் கேட்டபோது, எந்த கருத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
குவிந்த பொதுமக்கள்
பத்தாண்டுகளாக நடைபெற்ற வழக்கு என்பதாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்பதாலும் குழந்தைகளின் பெற்றோர்களும் உறவினர்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர்.
பொறியாளருக்கு ஜாமீன்
தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவரான கட்டிடப் பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப் பட்டது. இவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென அதே நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு மாலையில் ஜாமீன் வழங்கப்பட்டது.