சொத்து குவிப்பு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் தீ... முதல்வருக்கு அபசகுணமா?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் வாரத்தின் முதல் நாளான இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது அபச குணமாக பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் 27ம்தேதி சனிக்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ளது. நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு வெளியாகும் அந்த தீர்ப்பு, ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கப்போகிறது.
அதிமுகவினர் சிறப்பு பூஜை
எனவே அதிமுக நிர்வாகிகள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும், வேண்டுதல்கள் நிறைவேற்றியும், ஜெயலலிதா மீதான வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வெளியாக வேண்டும் என்று வேண்டி வருகின்றனர்.
சனிக்கிழமை வேண்டாமே..
அதே நேரம் தீர்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட உள்ளது ஜெயலலிதா தரப்பில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது. எனவே தீர்ப்பின் கிழமையை வேறு ஒரு நாளுக்கு ஒத்தி வைக்க வேண்டியும் என்று நீதிபதியிடம் ஜெயலலிதா தரப்பு வக்கீல் கேட்டதாகவும், அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கண்ணகி சிலை சென்டிமென்ட்
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதுவும் பிரதான கட்டிடத்தில் தீ பிடித்துள்ளது. ஆட்சியாளர்களை நோக்கி கேள்வி கேட்பது போல மதுரையை எரித்த கண்ணகி சிலை இருப்பதே ஆபத்தானது என்று சிலர் கருத்து கூறியிருந்த நிலையில், தலைமைச் செயலகத்திலேயே தீ பிடித்துள்ளது சகுணம் பார்ப்போரை யோசிக்க செய்துள்ளது.
இன்று தீ, வார இறுதியில் தீர்ப்பு
இந்த வார இறுதியில் முதல்வர் வழக்கில் தீர்ப்பு வரும் நிலையில், வாரத்தின் முதல் நாளில் தலைமை செயலகத்தில் தீ பிடித்துள்ளது அதிமுகவிலுள்ள சகுணம், சம்பிரதாயம் பார்ப்போருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே பரிகாரங்கள் செய்ய ஜெயலலிதாவுக்கு வேண்டியவர்கள் மூலமாக அவர்கள் தூது விடுவதாகவும் கூறப்படுகிறது.