இளவரசனின் நத்தம் காலனி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா... தர்மபுரியில் 144 தடை
தர்மபுரி: தர்மபுரியில் நத்தம் காலனி மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு 144 தடை உத்தரவினைப் பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டில் தர்மபுரியினைச் சேர்ந்த வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் - செல்லன் கொட்டாய்யைச் சேர்ந்த திவ்யா ஆகியோரின் காதல் மற்றும் கலப்புத் திருமணத்தினால் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இதனால் தர்மபுரி நத்தம் காலனி மக்களுக்கும், செல்லன் கொட்டாய் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் நத்தம் காலனியில் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்நிலையில் 2013, ஜூலை 4 ஆம் தேதி அன்று இளவரசனின் சடலம், தர்மபுரி ரயில்வே தண்டவாளத்தில் இருந்து கண்டறியப்பட்டது.
அன்றிலிருந்து, தர்மபுரியில் இருபிரிவினருக்கும் இடையில் நீறுபூத்த நெருப்பாக இச்சம்பவத்தால் ஏற்பட்ட வெறுப்பு இருந்து வருகின்றது.
இந்நிலையில், தர்மபுரியில் அமைந்துள்ள நத்தம் காலனி மாரியம்மன் கோவிலில் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. கலவரங்களைத் தடுக்கும் வகையில் திருவிழா வரையில் 20 நாட்களுக்கு அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது, நாயக்கன் பாளையம், நத்தம் காலனியைச் சுற்றி 5 கிலோ மீட்டர் வரையிலான சுற்றளவில் அமலில் இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார்.