ஆனா... 2011ம் ஆண்டு சங்கரன்கோவிலில் வைத்து ஜெ.வை இப்படித் திட்டினாரே அத்வாலே....???!!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மிகத் தீவிரமான ஆதரவை வெளிப்படுத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கெல்லாம் போய் புகார் கொடுத்து ஆவேசமாகப் பேசியுள்ள இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் ராமதாஸ் அத்வாலே ஒரு காலத்தில் இதே ஜெயலலிதாவை தலித் விரோத சக்தி என்று கடுமையாக சாடிப் பேசியவர் ஆவார்.
ஜெயலலிதாவை தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கடுமையாகப் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2011ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி சங்கரன்கோவிலில் நடந்த நகராட்சித் தலைவர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருந்தார் அத்வாலே. தனது கட்சியின் வேட்பாளர் சாந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசியது இதுதான்....
இந்தியா சுதந்திரம் அடைந்த 64 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள பரமக்குடியில் நடந்த தலித் படுகொலை போன்று வேறு எங்கும் நடந்ததில்லை. 3 பேரை துப்பாக்கியால் சுட்டும், 3 பேரை தாக்கியும் காவல்துறை கொலை செய்திருக்கிறது.
தலித் சமுதாய மக்களை ஆதிக்க சக்திகள் காவல் துறை துணையுடன் பழி வாங்கி வருகிறது. இதற்கு காரணமான முதல்வர் ஜெயலலிதா மீது வன்கொடுமை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துவதுடன் பலியானவர்களின் குடுமபத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தலித் மக்களுக்கு விரோதமாக செயல்படும் கட்சிகளை ஒழிக்க மாற்று அணியை உருவாக்க வேண்டும். அம்பேத்கர் கொண்டு வந்த அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
தலித் இனத்திற்கு என்று நாட்டில் எத்தனையோ அமைப்புகள் இருந்தும் பரமக்குடி சம்பவத்திற்கு யாரும் முழுமையாக போராடவில்லை. தலித் இன மக்களை அழிக்கும் வகையில் செயல்படும் தமிழகத்தின் இந்த அரசை அகற்றும் வரை இந்திய குடியரசுக் கட்சி போராடும் என்று அன்று பேசினார் அத்வாலே. ஆனால் இன்று ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதியையும், நீதிமன்றத்தையும், தீர்ப்பையும் கடுமையாக சாடியுள்ளார்.
அதுசரி.. எல்லா ஊரிலும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள் போல....