பேசுகிறாரா பிதற்றுகிறாரா எனத் தெரியாத தள்ளாட்டத் தலைவன் விஜயகாந்த்: சீமான்
மார்க்ஸ், சாக்ரடீஸ், பெரியார், அம்பேத்கார், புத்தன், பூலே, அரிஸ்டாட்டில், ஸ்டாலின், கரிபால்டி, மா&சே&துங், சேகுவேரா, கோசிமின், பிடல் காஸ்ட்ரோ, ஆபிரகாம் லிங்கன், மால்கமேக்ஸ், மார்டின் லூதர் கிங், சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், உயிர்நிகர் தேசியத் தலைவர் பிரபாகரன் என உலகின் அறிவுசார் பெருமக்களை எல்லாம் சுட்டிக்காட்டி மேடையில் முழங்குவீர்களே...!
எங்கள் நரம்புக்குள் முறுக்கேற்றிய உரைகள் அல்லவா அவை. உலகளாவிய பெருமக்களைப் பற்றிய அறிவை இளைய சமுதாயத்துக்கு ஏற்படுத்திய நீங்கள் இன்றைக்கு யாருக்கு அருகே போய் நிற்கிறீர்கள் என்பதைப் பார்த்தீர்களா?
பேசுகிறாரா பிதற்றுகிறாரா என்றே தெரியாத ஒரு தள்ளாட்டத் தலைவனுக்கு அருகே நிற்கத்தான் உலகத்தின் பேரறிவாளர்களைப் பற்றியெல்லாம் பேசினீர்களா நீங்கள்?
‘கேப்டன் 40 தொகுதிகளிலும் பரப்புரை செய்வதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்' என நா கூசாமல் சொல்கிறீர்களே...! இந்தளவுக்கு இறங்கிப்போக கேடுகெட்ட அரசியல் உங்களுக்குக் கற்றுக்கொடுத்து விட்டதா அண்ணா?
அவர் இருக்க வேண்டிய இடத்தில் 14 தொகுதிகளோடு நீங்கள் தலைமைத் தலைவனாக நிலைத்திருந்தால் எங்கள் நெஞ்சங்கள் எப்படிச் சிலிர்த்திருக்கும். அவருக்குக் கீழ் இயங்குகிற நிலையை நீங்களே ரசிக்கத் தொடங்கியது ஏன் அண்ணா?
மனம் முழுக்க இன்னும் இன்னும் எவ்வளவோ ஆதங்கமும், கேள்விகளும் இருக்கின்றன. ஆனாலும், நீங்கள் தோற்றுவிடக் கூடாது என்கிற துடிப்பு நெஞ்சை உலுக்குகிறது அண்ணா. நாடி நரம்புகளில் நீங்கள் ஏற்றிய இனவெழுச்சியும், உணர்வெழுச்சியும் துளியும் குறையாதவனாகச் சொல்கிறேன்.
உங்களின் நாளைய வெற்றிக்கு இப்போதே எனது இதயமார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு நியூஸ் சைரன் வார இதழில் சீமான் எழுதியுள்ளார்.