இலங்கை ராணுவ மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சீமான்
சென்னை: இலங்கையில் நடக்கும் ராணுவ மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் ராணுவ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறு பரப்பியதை கண்டித்தும், இலங்கை ராணுவ மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ஞாயிற்றுக்கிழமையன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலங்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு தலைமையேற்று சீமான், ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை அரசாங்கம் தனது ராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வரை பற்றி கொச்சைப் படுத்தி கருத்து வெளியிட்டிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை (17-ம் தேதி) முதல் 19 ம் தேதி வரை ராணுவ மாநாடு நடக்கிறது. இதில் மத்திய அரசின் சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.
இலங்கை இனப் படுகொலையை கண்டிக்காத இந்தியா இலங்கை மாநாட்டில் பங்கேற்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.