சீமான் மீதான வழக்குக்கு முகாந்திரம் இல்லை.. ஜாமீனில் விடுவித்தார் நீதிபதி!
மதுரை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீதான வழக்கில் முகாந்திரம் இல்லை என்று மதுரை மாஜிஸ்திரேட் கூறி விட்டார்.
மேலும், சீமான் மீது புகார் கொடுத்தவரும், தன்னிடம் போலீஸார் 2 தாள்களில் எதையோ எழுதி கையெழுத்து வாங்கியதாக கூறவே, சீமானை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சீமான் விடுவிக்கப்பட்டார்.
அதிமுக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் இருந்து வரும் சீமான் மீது ஏன் போலீஸார் பொய் வழக்குப் போட முனைந்தனர் என்பது புதிராக உள்ளது.
சோதனைச் சாவடி கலாட்டா
கடந்த 17ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பங்கேற்றார். அங்கிருந்து இரவு மதுரை திரும்பினார். மேலூர் அருகே சீமான் கார் வந்த போது சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறதுய.
இந்திக்காரர் கொடுத்த புகார்
இதில் சீமானும் அவருடைய ஆதரவாளர்களும் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் தகராறு செய்ததாக மேலூர் போலீசில் சுங்கச் சாவடி ஊழியர் அமீத் குமார் என்ற இந்திக்காரர் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆலப்பாக்கம் வீட்டில் வைத்து கைது
மேலூர் டிஎஸ்.பி மணிரத்னம் தலைமையில் நேற்று சென்னை வந்த போலீசார் ஆலப்பாக்கத்தில் உள்ள சீமான் வீட்டிற்குச் சென்றனர். அங்கு சீமான் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் போராட்டத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.
மதுரையில் விசாரணை
மதுரைக்குக் கொண்டு வரப்பட்ட சீமானை, புறநகர் எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர் மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி முன்பு சீமான் ஆஜர்படுத்த திட்டமிட்டனர். ஆனால் அவர் விடுமுறையில் இருந்ததால், 2வது நீதித்துறை நடுவர் பால் பாண்டி முன்பு சீமானை ஆஜர்படுத்தினர்.
நான் சொல்லலையே...இந்திக்காரர் மறுப்பு
அப்போது சீமான் மீது புகார் கூறிய அமீத் குமாரும் அங்கு ஆஜரானார். அவரிடம் நீதிபதி விசாரித்தபோது, தனக்கு தமிழ், ஆங்கிலம் தெரியாது என்றும், போலீஸார் 2 தாள்களில் ஆங்கிலத்தில் எதையோ எழுதி கையெழுத்துப் போடுமாறு கூறியதாகவும், தான் கையெழுத்துப் போட்டதாகவும், தானாக புகார் கொடுக்கவில்லை என்றும் கூறவே, வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
முகாந்திரம் இல்லை
இதையடுத்த சீமான் மீதான புகாரில் முகாந்திரமே இல்லையே என்று கூறிய நீதிபதி, அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். இதையடுத்து சீமானும், அவரது தரப்பினரும் வெற்றிப் புன்னகையுடன் வெளி வந்தனர்.
ஏன் பொய் வழக்கு...
இது பொய் வழக்கு என்பது நிரூபணமாகியுள்ளதால் சீமான் மீது ஏன் அதிமுக அரசு பொய் வழக்குப் போட்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.