ஊழல் வழக்கில் தண்டனை: திமுக எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் செல்வகணபதி!!
தருமபுரி: சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற தி.மு.க. எம்.பி தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
1991-1996-ம் ஆண்டு அதிமுக அரசில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது நாகை மாவட்டத்தில் சுடுகாடுகளுக்கு மேற்கூரைகள் அமைத்ததில் ஊழல் செய்து அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
செல்வகணபதி தற்போது தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். இருப்பினும் செல்வகணபதி மேல்முறையீடு செய்வதற்காக அவரது சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செல்வகணபதி 3 மாதத்துக்குள் மேல்முறையீடு செய்து அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தால் எம்.பி. பதவி பறிக்கப்படும் என்ற நிலை உருவானது. இதனால் திடீரென செல்வகணபதியே தமது எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டார்.
இது குறித்து தருமபுரியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய செல்வகணபதி, ராஜினாமா கடிதத்தை ராஜ்யபசாவுக்கு அனுப்பிள்ளேன். இது குறித்து விளக்கம் தெரிவித்து தி.மு.க. தலைமையகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்றார்.