சென்னையில் வீடு புகுந்து 10க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
சென்னை: கோயம்பேடு பகுதியில் வீடு புகுந்து 10க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, கோயம்பேடு பகுதியின் அருகேயுள்ள நெற்குன்றத்தை சேர்ந்த ஒரு பெண்மணி, நேற்று முன்தினம் கோயம்பேடு மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில், "சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் தனது கணவர் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்ற நேரத்தில் ஒரு நபர் வீடு புகுந்து வந்து, நிர்வாணமாக நின்றபடி, கத்தியை காட்டி தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டினார். என்னை பலாத்காரம் செய்ய முற்பட்டார். ஆனால், நான் கத்தி கூச்சல் போட்டதால் எனது செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்" என்று தெரிவித்திருந்தார்.
சந்தேக நபர் கைது
இதையடுத்து பெண்ணிடம் பறிக்கப்பட்ட செல்போனை வைத்து மர்ம நபரை போலீசார் கண்காணித்தனர். இந்நிலையில் கைலி கட்டிய நிலையில் கோயம்பேடு பகுதியில் சுற்றி திரிந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அம்பலம்
அப்போது, அந்த நபர்தான் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டவர் என்பது உறுதியானது. விசாரணையில் அந்த நபர், நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சதீஷ் (33) என்பதும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியவந்தது.
பெண்களை நோட்டமிடுவார்
பகலில் பெயின்டர் வேலைக்கு செல்லும் சதீஷ், மாலையில் தூங்கிவிட்டு நள்ளிரவு 12 மணிக்கெல்லாம் விழித்துக்கொள்வது வழக்கமாம். நெற்குன்றம் பகுதியில் வசிப்போரில் பெரும்பாலானவர்கள் மார்க்கெட்டில் வேலை செய்கிறவர். எனவே அதிகாலையில் ஆண்கள் மார்க்கெட்டுக்கு சென்றுவிடுவதால் பெண்கள் வீட்டில் தனியாகத்தான் இருப்பார்கள். இதை பயன்படுத்திக் கொண்டு தனியாக இருக்கும் பெண்களுடன் தவறாக நடக்க சதீஷ் திட்டமிட்டு காய் நகர்த்துவாராம்.
10க்கும் மேற்பட்ட பெண்கள்
பகலில் ஓய்வு கிடைக்கும்போது அங்குள்ள வீடுகளில் யார் யார் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் எந்த வீட்டில் தனியாக இருக்கிறார்கள் என்று பார்த்து கொள்ளும் சதீஷ் அதிகாலையில் ஆண்கள் இல்லாத வீட்டுக்குள் நுழைந்துவிடுவாராம். அந்த வீட்டில் இருக்கும் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, தன் ஆசைக்கு இணங்க வைக்கும் சதீஷ், பிறகு அங்கிருக்கும் பொருட்களை எடுத்து செல்வது வாடிக்கையாம். இது வரை 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் இது போன்று தவறாக நடந்து கொண்டுள்ளதாக சதீஷ் போலீசில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த சம்பவங்கள் குறித்து இதுவரை போலீசாரிடம் யாரும் புகார் அளிக்காததால், சதீஷின் சபல வேட்டை தொடர்ந்துள்ளது. இந்த சம்பவம்கோயம்பேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.