புத்தி பேதலித்ததால் சேது திட்டத்தை எதிர்க்கிறார் ஜெ.: கருணாநிதி
வேலூர்: சேது சமுத்திர திட்டத்தை, வேண்டாம், என திருப்பி அனுப்பிய ஒரே முதல்வர் ஜெயலலிதா தான். தமிழகத்தில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும். அப்போது, சேதுசமுத்திர திட்டத்தை நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல்ரகுமான், அரக்கோணம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் இளங்கோ, திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் அண்ணாத்துரை, ஆரணி தொகுதி வேட்பாளர் சிவானந்தம் ஆகியோரை ஆதரித்து, வேலூரில் தி.மு.க., தலைவர் கலைஞர் பேசினார்.
அவர், ‘'வேலூரில், அதிகாரிகள், போலீசார் பாடுபட்டு, இக்கூட்டத்தை எந்த அளவுக்கு சிறிதாக நடத்த முடியுமோ, அந்த அளவுக்கு நடத்த அனுமதி அளித்துள்ளனர். இதே அதிகாரிகள், தி.மு.க., ஆட்சியிலும், உங்களுடைய பணியை தொடர வேண்டும்.
தி.மு.க., ஆட்சியின் போது, அரசு அலுவலர்களுக்கு செய்த நல்ல திட்டங்களை, அரசு ஊழியர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று, எங்களுக்கு நடப்பது, நாளை உங்களுக்கும் நடக்கும். தி.மு.க.,வில், மத சார்பற்ற இயக்கங்கள் ஒன்று சேர்ந்தது சுயநலத்தால் அல்ல; பொது நலத்தால் தான்.
இட ஒதுக்கீடு
இஸ்லாமியர்களுக்கு, 3.5 இடஒதுக்கீடு தந்து, கல்வியில், வேலை வாய்ப்பில், அனைத்து துறைகளிலும், அவர்களை முன்னேற்றியது, தி.மு.க., தான்.முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று, நான் முதல்வராக இருந்த போது, உருது அகாடமி அமைக்கப்பட்டது.
விடுமுறை ரத்து
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில், அரசு விடுமுறையை, தி.மு.க., தான் அறிவித்தது. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா அரசு, அந்த விடுமுறையை ரத்து செய்தது.
பலனை அனுபவிக்கிறீர்கள்
கடந்த முறை, தி.மு.க., ஆட்சிக்கு, தமிழக மக்கள் ஆதரவளிக்காமல், அ.தி.மு.க.,வை அரியாசனத்தில் அமர்த்தி, அதற்கான பலனையும் அனுபவித்தீர்கள். எடுத்ததற்கெல்லாம், மத்திய அரசு, தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை, எனக் குறை கூறும், ஜெயலலிதாவோ, அ.தி.மு.க., அமைச்சர்களோ, எந்த திட்டத்தை நாங்களோ, காங்கிரசோ தரவில்லை என கூற முடியுமா? இதற்காக, காங்கிரசுக்கு வக்காலத்து வாங்குகிறேன், என நினைக்க வேண்டாம்.
காங்கிரஸ் கட்சியால் ஏமாற்றம்
காங்கிரசிலும் சில குறைகள் உண்டு. நாம், அக்கட்சியால் ஏமாற்றம் அடைந்திருக்கோம்.காங்கிரஸ் கொடுத்த திட்டங்களை, அ.தி.மு.க., அரசு பயன்படுத்தவில்லை, என்பதே நிதர்சனம்.
பறக்கும் சாலை திட்டம்
சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், சென்னைக்கு நல்ல வளங்கள் கிடைத்திருக்கும். ஜெயலலிதா, பறக்கும் சாலை திட்டத்தை ஒதுக்கி தள்ளினார்.
சேது சமுத்திர திட்டம்
மத்திய அரசு, அதனை கொண்டு வர நினைத்த போது, வேண்டாத திட்டத்தை கொண்டு வருவதாக கூறி, ஜெயலலிதா கோர்ட்டுக்கு சென்றார். அண்ணாத்துரையின் கனவான சேது சமுத்திர திட்டத்தை, தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தோம்.
ஜெயலலிதாவிற்கு புத்தி பேதலிப்பு
தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதாவும், சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவேன், என அறிவித்தார். ஆட்சி அமைத்தவுடன், ஜெயலலிதாவுக்கு புத்தி பேதலித்ததால், இத்திட்டத்தை வேண்டாம், என்கிறார். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர், இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும், என உறுதி அளித்தனர்.
திமுக நிறைவேற்றும்
ஆனால், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடியாது, என ஜெயலலிதா உறுதியாக தெரிவித்தார். மத்திய அரசு கொடுக்க நினைத்த திட்டத்தை, வேண்டாம், என திருப்பி அனுப்பிய ஒரே முதல்வர் ஜெயலலிதா தான். தமிழகத்தில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும். அப்போது, சேதுசமுத்திர திட்டத்தை நாங்கள் நிறைவேற்றியே தீருவோம்.
மாற்றத்தை விரும்பும் மக்கள்
விலைவாசி உயர்வாலும், 9 மணி நேர மின்தடையாலும், மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நாட்டையே இருட்டாக மாற்றிய ஜெயலலிதாவின் ஆட்சி, எப்போது முடியும், என்று மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். தமிழக மக்கள் வளமாக, வலிமையோடு வாழ, தி.மு.க., என்றென்றும் பாடுபடும்''என்று கருணாநிதி கூறினார்.