டீசல் பற்றாக்குறை எதிரொலி- தடம் மாறும் அரசு பஸ்கள்
நெல்லை: டீசல் பற்றாக்குறையை காரணம் காட்டி அரசுப் பேருந்துகள் தடம் மாறி இயக்கப்படுவதால் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கி வரும் நிலையில் திடீரென பஸ்கள் தடம் மாறி இயக்கப்படுவதால் கிராம புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் டீசல் சிக்கனத்தை காரணம் காட்டி ஒரு லிட்டருக்கு சுமார் 5 கிமீ ஓட்ட வேண்டும் என டிரைவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு குறைவாக ஓட்டும் பஸ் டிரைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் அதிகாரிகளுக்கும், டிரைவர், கண்டாக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் குறைந்த தூரம் செல்லும் கிராம பஸ்களை தடம் மாறி இயக்கவும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு கிராமத்துக்கு சென்று வரும் பஸ்சை மறுநாள் அதை விட தூரமாக உள்ள பகுதிக்கு இயக்குமாறு டிரைவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதனால் சம்பந்தப்பட்ட கிராம பகுதிகளுக்கு பஸ்கள் செல்லாமல் முடக்கப்படுவதாக தினமும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த வழித்தடத்தை மாற்றி பிற வழித்தடங்களில் பஸ்களை இயக்குவதால் கண்டக்டர்களுக்கு கட்டணம் தொடர்பான பிரச்சனை ஏற்படும்.
சாத்தான்குளம், உடன்குடி, உள்ளிட்ட பகுதிகளுக்கு அடிக்கடி செல்லும் பஸ்கள் அடிக்கடி வழித்தடம் மாறி இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு வழித்தடத்தை மாற்றாமல் பஸ்சை இயக்க வேண்டும். கிலோ மீட்டருக்காக பஸ்களை இயக்காமல் பயணிகளின் நலனுக்காக இயக்கி வருமானத்தை அதிகரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.