தமிழர் கலாசாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றத்தை தடுப்பது உடனடி தேவை: சம்பந்தன்
சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழக பாஜக தலைவர்களை சென்னை கமலாலயத்தில், நேற்று சந்தித்துப் பேசினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு சம்பந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில் "பாரதிய ஜனதா தமிழக நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை திருப்தியாக அமைந்தது. இலங்கையில் 13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளாக ஒரே மாகாணமாக ஆக்கப்பட வேண்டும்.
இலங்கை அரசுடன் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னையில் மாற்றம் ஏற்படுமென பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
இந்திய அரசுக்கு அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. அதிகாரப்பகிர்வையும் முறையாக செயல்படுத்தாமல் இழுத்தடித்து வருகிறது. வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் கலாசாரத்தை அழிக்க இலங்கை அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழர் பகுதிகளில் சிங்கள குடியிருப்புகளை ஏற்படுத்துவதன் மூலமாக இதுபோன்று இலங்கை அரசு செய்கிறது.
இந்த கலாசார அழிவை தடுப்பதுதான் மிக உடனடி தேவையாக உள்ளது.
ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ளது. எனவே நாட்டை பிரித்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோர முடியாது" என்று அவர் தெரிவித்தார்.