காவல்துறையும்… சில கறுப்பு ஆடுகளும்!
சென்னை: திருடன் போலீஸ் என்றொரு திரைப்படம் கோலிவுட்டில் தயாராகி வருகிறது. திருடனை பிடிப்பதுதான் போலீசின் தொழில் ஆனால் போலீசே திருடனாக மாறினார் யாரால் பிடிக்க முடியும்.
ஸ்காட்லாந்து யார்டு போலீஸ்க்கு சமமாக ஒப்பிடப்படும் தமிழ்நாட்டு காவல்துறை இருக்கும் சில கறுப்பு ஆடுகளால் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
வழிப்பறி, கொலை, கொள்ளை, திருட்டு என அனைத்து குற்றச்செயல்களிலும் தொடர்புடையவர்களுடன் காவல்துறையில் இருப்பவர்கள் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதும் அதிகரித்து வருகிறது.
நட்போடு நில்லாமல், காவல் துறையினரே திருட்டு வழக்கில் சிக்கி கைதாவதும், வரதட்சணைப் புகாரில் சிக்கி சிறை செல்வதும், கள்ளத் தொடர்பில் கொலை செய்யப்படுவதும் சர்வசாதரணமாகிவிட்டது.
வழிப்பறி கொள்ளை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாமக்கல்லில் இருந்து மதுரைக்கு வந்த வங்கி ஊழியர் ஜெயக்குமார் என்பவரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மடக்கிய மூவர், அவரிடம் இருந்த செல்போன், ஏடிஎம் கார்டினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
அசால்ட் ஆறுமுகங்கள்
இந்த வழிப்பறி கொள்ளை பற்றி அருகில் உள்ள அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு சென்றபோது அதை காதிலேயே போட்டுக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தியுள்ளனர். பின்னர் வங்கி மூலமாக சென்னை போலீஸ் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டார் ஜெயக்குமார்.
பட்டாலியன் போலீஸ்
சென்னையில் இருந்து கடுமையான உத்தரவு வந்த பிறகே மதுரை காவல்துறையினர் சுறுசுறுப்பாகி ஏ.டி.எம் சென்டரில் பதிவாகியிருந்த வீடியோ ஆதாரங்களை வைத்து மூன்று பேரைக் கைது செய்தனர். இதில் அதிர்ச்சிக்குறிய விஷயம் என்னவெனில் கைதான செந்தில், செந்தில்குமார், பிரவீன் என்ற அந்த மூவரும் மதுரை 6-வது பட்டாலியன் போலீஸ் என்பதுதான்.
திருடன்களுக்கு அடைக்கலம்
இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில்... ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸ், மதுரை பட்டாலியன் கேம்ப்க்குள் நுழைந்து அங்கு பணிபுரியும் டி.எஸ்.பி ஒருவரின் ஜீப் டிரைவர் பாண்டித்துரையின் அறையை சோதனை செய்ததில், இந்த மூன்று திருட்டு போலீசாரும் சிக்கினர். அவர்களோடு பாண்டித்துறையையும் போலீசார் கைது செய்தனர். அதாவது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பின் பாண்டிதுரையின் ரூமில் மூவரும் பதுங்கிவந்துள்ளனர். இதனால் இவர்களை பிடிப்பதே பெரும் சவாலாக இருந்து வந்துள்ளது.
டீச்சர் வீடுகளில் திருட்டு
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கல்யாணசுந்தரம் என்பவன் தலைமையில் ஒரு கும்பல் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது. இதில் மதுரை பட்டாலியன் போலீஸ் ஜீப் டிரைவர் பாண்டித்துரையும் அடக்கம். இந்தக் கும்பல் சிவகங்கை காளையார்கோவில், பரமக்குடி பகுதிகளில் டீச்சர் வீடுகளாகப் பார்த்து திருடியிருக்கிறார்கள். திருடியதும் பட்டாலியன் கேம்ப்பில் இருக்கும் பாண்டித்துரையின் அறையில் தங்கிவிடுவார்கள். இப்படித்தான் போலீசுக்குத் தண்ணி காட்டியுள்ளனர்.
பெட்ரோல் திருட்டு போலீஸ்
சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகனம் ஒன்றில் அடிக்கடி பெட்ரோல் திருடப்பட்டு வந்துள்ளது. அந்த வாகனத்தின் டிரைவரான போலீஸ்காரரே பெட்ரோலை திருடியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஆனால் வழக்கு பதிவு செய்யாமல் துறை ரீதியான நடவடிக்கைகளை மட்டும் எடுத்துள்ளார்.
பலாத்கார போலீஸ்
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி விழுப்புரம் மாவட்டம், திருகோவிலூர் தாலுகாவில் உள்ள டி.மண்டபம் கிராமத்தை சேர்ந்த இருளர் இனத்தை சேர்ந்த பெண்களை பலாத்காரம் செய்யதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.சீனிவாசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன், போலீஸ்காரர்கள் ஆர்.தனசேகரன், ஆர்.பக்தவச்சலம், கார்த்திகேயன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பணி இடைநீக்கம்
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் பணிஇடைநீக்கம் செய்து 28.11.2011 அன்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவு பிறப்பித்தார். இந்த சஸ்பெண்ட் உத்தரவு சரியானதுதான் என்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்
தலைமறைவு போலீஸ்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, திருவல்லிக்கேணி போலீசார் இரு தினங்களுக்கு முன் ரோந்து சென்றனர். அப்போது, சாலையில் புதைக்கப்பட்டிருந்த தொலைபேசி கேபிள்களை திருடிய வழக்கில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முனியப்பன் (25) முருகன் (37) ராயபுரத்தைச் சேர்ந்த சக்தி (33) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இத்திருட்டு வழக்கில் அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய எஸ்.ஐ., சிட்டிபாபுவுக்கு (57) தொடர்பு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது. அவரையும் அமுக்கிப் பிடித்து கைது செய்தனர் காவல்துறையினர்.
கள்ளத்துப்பாக்கி போலீஸ்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ராமநாதபுரத்தில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் மறைத்த ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர்களுக்கு கஞ்சா விற்பனையாளருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கள்ளத்துப்பாக்கியை கஞ்சா வியாபாரிகளிடம் விற்றுத்தர டீல் பேசியுள்ளார் இந்த சப்- இன்ஸ்பெக்டர்.
கொலையாளிகளுடன் தொடர்பு
மேலும் ராமநாதபுரத்தில் நடந்த கவுரவ கொலை உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுடன் மேற்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால், ஏட்டு சுரேஷ் ஆகியோர் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
வெள்ளைத்துரை ரெய்டு
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை தீவிர விசாரணை நடத்தி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் சட்டவிரோதமாக அனுமதியின்றி கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பதை உறுதி செய்தார். ஜெயபால் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கள்ளத்துப்பாக்கியை கைப்பற்றியதுடன் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலை ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
கடத்தல் வழக்கு
கடந்த 2009-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் கேணிக்கரை போலீசார் வாகன சோதனை நடத்தியபோது ஜெயபாலின் அண்ணன் முத்துராஜா, சித்தி மகன் நாகராஜ் ஆகியோர் துப்பாக்கியுடன் பிடிபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
மேலும் மத்திய பிரதேசத்தில் இருந்து 11 துப்பாக்கிகள் வரவழைக்கப்பட்டு அதனை அவர்கள் உள்பட பலரும் பிரித்துக்கொண்டுள்ளனர். அண்ணன் முத்துராஜாவிடம் இருந்து வாங்கிய துப்பாக்கியை தான் வைத்துக்கொண்டதாக ஜெயபால் தெரிவித்தாராம்.
துறைரீதியான நடவடிக்கை
இதனிடையே அனுமதியின்றி கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலை பணிஇடை நீக்கம் செய்ய போலீஸ் டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததை அறிந்ததும், அதனை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க மறுத்து உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு சுரேஷ் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் பறிப்பு போலீஸ்
கோவை, ரங்கே கவுடர் வீதியை சேர்ந்தவர்கள் சரவன்சிங், மங்கள்ராம், பவர்லால். கடந்தாண்டு இவர்களது கடை மற்றும் குடோன்களிலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பான்மசாலா பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக வெரைட்டிஹால் மற்றும் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்கும் மாநகர போலீஸ் முன்னாள் துணை கமிஷனர், எஸ்.ஐ., மற்றும் சில போலீசாருக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது.
சிபிசிஐடி விசாரணை
இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஜிம் ஹக்கிம், புஷ் அபுதாகிர் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.
போலீஸ் உடந்தை
வடமாநில வியாபாரிகளிடம் நடந்த கொள்ளை செயலுக்கும், மாநகர போலீஸ் முன்னாள் துணை கமிஷனர், எஸ்.ஐ., உள்பட சில போலீசாருக்கும் தொடர்பு இருப்பதாகவும், தங்களது செயலுக்கு போலீசாரும் உடந்தையாக இருந்ததாகவும் கைதான நபர்கள் தெரிவித்தனர்.
கள்ளத்தொடர்பில் கொலை
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கணேசன். அண்ணாமலை நகரில் வசித்து வந்த இவர், செவ்வாய்க்கிழமை இரவு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடபான விசாரணையில் கிள்ளை காவல்நிலையத்தில் கணேசன் பணிபுரியும்போது, திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், அந்தத் தொடர்பே இப்போது கொலைக்குக் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
வேலியே பயிரை மேய்ந்தால்
மக்களைக் காக்கத்தான் காவல்துறை உள்ளது. ஆனால் காவல்துறையினரே கொலை, கொள்ளை, வழிப்பறி, பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கு சென்று முறையிடுவது? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும். இதுபோன்ற பயிரை மேயும் வேலிகளால்தான் நேர்மையான காவல்துறையினருக்கும் சமூகத்தில் கெட்டப்பெயர் ஏற்படுகிறது என்று கூறுகின்றனர் நேர்மையான அதிகாரிகள். காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் சாட்டையை சுழற்றுவாரா?