நாளை சோனியா காந்தி, நாளை மறுநாள் மோடி பிரச்சாரம்: பரபரக்கும் கன்னியாகுமரி
குமரி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை குமரி வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னையில் பிரச்சாரம் செய்தார். மேலும் அவர் நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை, சேலம், குமரி உள்பட 6 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை குமரியில் பிரச்சாரம் செய்கிறார். அவர் குமரி அருகே உள்ள முருகன்குன்றத்தில் நடக்கும் மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
சோனியா காந்தி வருவதால் குமரியில் நடக்கும் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், கட்சியின் தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் லட்சக் கணக்கில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனியா குமரியில் மட்டுமே பிரச்சாரம் செய்கிறார்.
சோனியாவின் வருகையையொட்டி குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜுகளில் சந்தேகப்படும்படி யாராவது தங்கியிருக்கிறார்களா என்று சோதனை செய்யப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாளை மறுநாள் மோடி குமரியில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.