இந்த சாமி பேச்சைக்கேட்டு பாஜக அம்மாவுக்கு எதிராக சதி செய்துவிட்டது: அன்பழகன் எம்.எல்.ஏ.
புதுச்சேரி: ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான் காரணம் என்று புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரியில் அதிமுக இளைஞர் அணி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. உண்ணாவிரதப் போராட்டத்தை அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் துவங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
நீதிமன்றம்
27ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்திற்கு நான் சென்றிருந்தேன். அம்மாவை சிறுது நேரம் ஓய்வெடுக்கவோ, சாப்பிடவோ ஏன் தண்ணீர் கூட குடிக்கவிடவில்லை. கிரிமினல் குற்றவாளியை போன்று அவரை நடத்தினார்கள். கர்நாடக காவல்துறை மற்றும் நீதித்துறை சேர்ந்து தான் இந்த தொல்லைகளை கொடுத்தது.
சதி
அம்மாவின் புகழ் நாடெங்கும் பரவுவதை பொறுக்க முடியாமல் பாஜக அரசு, காங்கிரஸ், திமுக ஆகியவை சேர்ந்து செய்த சதி இது. இது வாங்கப்பட்ட தீர்ப்பு ஆகும்.
தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்களில் 37ல் அதிமுக வெற்றி பெற்றதன் மூலம் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு மாற்று தலைவராக அம்மா உருவெடுத்தார்கள். இது பாஜகவின் கண்களை உறுத்தியது.
பாஜக
சுப்பிரமணியம் சாமி கூறியதை எல்லாம் கேட்டு பாஜக அம்மாவுக்கு எதிராக சதி செய்துவிட்டது.
காவிரி
காவிரி நீர் விவகாரத்தில் அம்மா நீதிமன்றம் மூலம் கர்நாடக அரசுக்கு எதிராக போராடியதால் அம்மாநில அரசு இவ்வாறு தண்டனை வழங்கியுள்ளது.
சோனியா
ஒரு வெள்ளையர் நம் நாட்டை ஆட்சி செய்வதா என்று அம்மா தான் சோனியா காந்தி பற்றி முதன்முதலாக தெரிவித்தார். அதை மனதில் வைத்து தான் இத்தகைய தண்டனையை அளிக்குமாறு சோனியா கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசை வலியுறுத்தியுள்ளார்.
கண்ணன்
அம்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. கண்ணனுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.