திருவண்ணாமலை மகாதீபம்: சிறப்பு பஸ்கள்; ரயில்கள் இயக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபத்திருவிழாவை ஒட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து 2400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் மகா தீபம் நாளை மறுநாள் (17ந் தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. சுமார் 20லட்சம் பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியூர் பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 2400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள்
வேலூர், சென்னை, பெங்களூரில் இருந்து அதிக பஸ்கள் இயக்கபட உள்ளன. மேலும் சேலம், திருச்சி, மதுரை, காஞ்சீபுரம், பாண்டிச்சேரி, விழுப்புரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் நாளை 16ந் தேதி முதல் 18ந் தேதி வரை இயக்கபட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடிப்படை வசதிகள்
தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகருக்கு வெளியே 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்
இதே போல் சென்னையில் இருந்து காட்பாடி, விழுப்புரம் வழியாக 6 சிறப்பு ரயில்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையன்று காலை 9.15மணிக்கு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
முன்பதிவு இல்லை
இதே போல் திருவண்ணாமலையில் இருந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இதில் முன்பதிவு செய்யப்படாத இருக்கை வசதி கொண்ட 8 ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் அரக்கோணம் காட்பாடி வழியாக செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.