ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தும் இந்து சமய அறநிலையத்துறை
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற வேண்டும் என்று வேண்டி தமிழகத்தின் முக்கியக் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு வருகிறதாம். பிரசாதத்தையும் முதல்வரிடம் அதிகாரிகள் கொடுக்கப் போகிறார்களாம்.
வழக்கமாக அதிமுகவினர்தான் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளின்போது கோவில்களில் சிறப்பு அபிஷேகம், தங்கத் தேர் இழுப்பது, மண் சோறு சாப்பிடுவது என அமர்க்களப்படுத்துவர்.
ஆனால் தற்போது ஜெயலலிதா சொத்துக் குவிப்புவழக்கில் விடுதலை பெற வேண்டி அரசு அதிகாரிகளே சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கு...
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. கடந்த 1991-96 கால கட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்த சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு...
நீண்ட காலமாக இழுபறியாக இருந்து வந்த இந்த வழக்கில் செப்டம்பர் 27ம் தேதி பெங்களூர் கோர்ட் தீர்ப்பை அளிக்கவுள்ளது. இதனால் அதிமுக வட்டாரம் பரபரப்பில் மூழ்கியுள்ளது.
சிறப்புப் பூஜை...
இந்த நிலையில்தான் தீர்ப்பு முதல்வருக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியக் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தி பிரசாதத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், கோவில் செயல் அலுவலர்களுக்கும் உத்தரவு வந்துள்ளதாம். இந்த உத்தரவை யார் போட்டுள்ளது என்று தெரியவில்லை.
ஒப்படைப்பு...
இந்த உத்தரவின்படி கடந்த சில நாட்களாக பூஜைகள் அமர்க்களமாக நடந்து வருகிறதாம். மேலும் பிரசாதமும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறதாம். மொத்தமாக வந்து சேர்ந்ததும், இதை உயர் அதிகாரிகள் எடுத்துக் கொண்டு போய் முதல்வரிடம் நேரடியாக ஒப்படைக்கவுள்ளனராம்.