நெல்லை, திருவனந்தபுரத்துக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்: கோவை பயணிகளுக்கும் பலன்!
சென்னை: நெல்லை மற்றும் கோவை வழியாக திருவனந்தபுரத்துக்கு இருவேறு சிறப்பு ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஓணத்தையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையிலிருந்து நெல்லை மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நெல்லை- சென்னை எழும்பூர் ‘பிரீமியம்' சிறப்பு ரயில் (எண். 06746) நெல்லையிலிருந்து வருகிற 31ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து (எண்.06745) அடுத்த மாதம் 1ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்டிரல்- திருவனந்தபுரம் அதி விரைவு ரயில் (எண். 06347) சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து அடுத்த மாதம் 4ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
சென்னை சென்டிரல்- திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கண்ணூர், காயாங்குளம் மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இவ்வாறு அந்த அதில் கூறப்பட்டுள்ளது.