கரூர் மாவட்ட பாமக உடைந்தது! வேல்முருகன் கட்சியில் இணைந்தார் மா.செ ஆசீம்கான்!!
கோயம்புத்தூர்: கரூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பிளவுபட்டுள்ளது. கரூர் மாவட்ட பாமக செயலாளர் ஆசீம் கான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச்செயலராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தி. வேல்முருகன். கடந்த 2011ஆம் ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அக்கட்சியை விட்டு வெளியேறினார்.
பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பாமகவில் இருந்த மூத்த தலைவர்கள் காவேரி, காமராசு, எஸ்.எம். சண்முகம் உள்ளிட்டோர் வேல்முருகன் கட்சியில் இணைந்தனர். தமிழக வாழ்வுரிமை சார்ந்த பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் வேல்முருகன். அண்மையில் கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படங்களுக்கு எதிராக 65 அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளை தமிழக வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பு மூலம் அவர் ஒருங்கிணைத்திருந்தார்.
இதன் பின்னர் புலிப்பார்வை படத்தில் காட்சிகளை மாற்றி அமைப்போம் என்று வேந்தர் மூவிஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆசீம்கான் இன்று வேல்முருகனை நேரில் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.