இலங்கையில் 65 விடுதலைப்புலிகள் கைது...
கொழும்பு: விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 65 விடுதலைப்புலிகளை கைது செய்திருக்கிறது இலங்கை அரசு.
இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் மற்றும் 15 தமிழ் அமைப்புகளுக்கும் தடை விதித்து இருக்கிறது. அந்த தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசின் காவல்துறை செய்தித்தொடர்பாளர் அஜித் ரோகனா கொழும்பு நகரில் செய்தித்தார். அப்போது அவர், ''இலங்கையில் கடந்த மாதம் விடுதலைப்புலிகள் 65 பேரை நாங்கள் கைது செய்து உள்ளோம். இவர்களில் 10 பேர் பெண்கள் ஆவார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியிலும், நிதிதிரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், விசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களில் 5 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பயன்படுத்தி அவர்கள் நிவாரணம் தேடி கொள்ளலாம்" என்றார்.