34 ஆண்டுகள் அடக்கி வைத்திருந்த பாசம் – குடும்பத்துடன் இணைந்த இலங்கை அகதி
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளில் ஒருவர் 34 ஆண்டுகள் கழித்து தன்னுடைய குடும்பத்தினரைச் சந்தித்த சம்பவம் அங்கு அனைவர் மனதையும் உருக்கி உள்ளது.
குமரியில் ஏராளமான இலங்கை அகதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பலரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இலங்கையில் வசிக்கிறார்கள்.
இலங்கையில் நடந்த இன கலவரத்தின்போது குடும்பத்தினரை பிரிந்து தமிழகம் வந்து வசிக்கும் அகதிகளில் பலருக்கு இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பே இல்லாத நிலை நிலவுகிறது.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம்:
இந்த நிலையில் இது போன்ற இலங்கை அகதிகளுக்கும் இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்களுக்கும் மீண்டும் உறவை ஏற்படுத்தி கொடுத்து உதவ இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
குமரி மாவட்ட அகதிகள்:
இதைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் உதவியுடன் குமரி மாவட்ட இலங்கை அகதிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
34 ஆண்டுகள் கழித்து:
இதன் முதல்படியாக ஞாறாவிளை அகதிகள் முகாமில் 34 ஆண்டுகளாக தனியாக உறவினர்களை பிரிந்து வசித்து வந்த இந்திராணி என்ற பெண் அகதியின் உறவினர்களை கண்டு பிடித்து அவர்களை குமரி மாவட்டம் வரவழைத்தனர்.
கண்ணீர் சொன்ன கதை:
பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட அந்த அகதிகள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
சந்திக்க வைத்தவர்களுக்கு நன்றி:
தங்கள் சந்திப்பு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியருக்கும், செஞ்சிலுவை சங்கத்திற்கும் உளமாற நன்றி கூறினார்கள். இச்சந்திப்பு அங்கிருந்த அனைவரது மனதையும் உருக்கியது.