ஸ்ரீரங்கத்தில் எங்கு பார்த்தாலும் ஜெ. ஆதரவு போராட்டங்கள்!
திருச்சி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா சட்டசபை உறுப்பினராக இருந்த ஸ்ரீரங்கத்தில் அவருக்கு ஆதரவான போராட்டங்கள் பெருமளவில் நடந்து வருகின்றன.
ஸ்ரீரங்கம் நகர்ப்புறத்தில் மட்டுமல்லாமல் தொகுதிக்குட்பட்ட கிராமங்களிலும் ஜெயலலிதா ஆதரவு போராட்டங்கள் களை கட்டியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, காங்கேயம், பர்கூர் என பல தொகுதிகளில் போட்டியிட்டு வந்த ஜெயலலிதா, கடந்த தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டார்.
அபார வெற்றி
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா அபார வெற்றி பெற்று சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனிக் கவனம்
வெற்றி பெற்ற பின்னர் ஸ்ரீரங்கம் தொகுதிக்குத் தனி கவனம் செலுத்தினார் ஜெயலலிதா. ஸ்ரீரங்கம் மட்டுமல்லாமல் திருச்சி மாவட்டத்திற்கும் அவர் சிறப்புக் கவனம் கொடுத்தார்.
திருச்சிக்கு முக்கியத்துவம்
மேலும் அரசுத் துறைகளும் கூட திருச்சி மாவட்டம் தொடர்பான அனைத்துத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களையும், ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடுக்கி விடப்பட்டன.
அதிர்ச்சியில் ஸ்ரீரங்கம்
தற்போது தங்களது தொகுதி எம்எல்ஏவான ஜெயலலிதா பதவியை இழந்திருப்பதும், சிறைக்குப் போயிருப்பதும், எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் ஸ்ரீரங்கம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆதரவுப் போராட்டங்கள்
தற்போது ஸ்ரீரங்கம் முழுவதும் ஜெயலலிதா ஆதரவு போராட்டங்கள் களை கட்டியுள்ளன.
கிராமங்களிலும்
ஸ்ரீரங்கம் நகர்ப் பகுதியில் அதிமுகவினர் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களிலும் போராட்டங்கள் களை கட்டியுள்ளன.
400 படிகளில் முட்டிக்கால் போட்டு ஏறிய தொண்டர்
இதற்கிடையே, கர்நாடக தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, வழக்கில் இருந்து வெற்றியாளராக விடுதலை பெற்று வரவேண்டி, அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சிபிள்ளையார் கோயிலின் 400 படிகளிலும் முட்டிக்காலிட்டுச் சென்று பிரார்த்தனை மேற்கொண்டார்.
திருவெறும்பூரில் நரிக்குறவர்கள் உண்ணாவிரதம்
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நரிக்குறவர்கள் பலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் தமிழகத்தில் எந்த அரசும் செய்யாத பல நலத் திட்டங்களை எங்களது சமூகத்திற்கு செய்தவர் ஜெயலலிதா மட்டுமே. எங்களது பிள்ளைகளும் பள்ளியில் படிக்க பல உதவிகளைச் செய்தவர் அவர்தான். எங்களுக்கு சைக்கிள்கள், மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்டவற்றைக் கொடுத்தார். அவர் விடுதலையாக வேண்டும் என்று கண்ணீர் மல்கக் கூறினர்.