அழகிரி பூமியில் மையம் கொண்ட ஸ்டாலின் புயல்.... 14 இடங்களில் இன்று பிரசாரம்
மதுரை: மதுரையில் இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 14 இடங்களில் வேன் மூலம் பிரசாரம் செய்கிறார். இரவு ஆணையூரில் நடைபெறும் பொதுக் கூட்டததில் அவர் உரை நிகழ்த்துகிறார்.
மதுரையில் திமுக சார்பில் வேலுச்சாமி போட்டியிடுகிறார். அவருக்கு இன்று தீவிர ஆதரவு திரட்டுகிறார் ஸ்டாலின்.
மதுரை அழகிரியின் பூமி என்பதால் வேலுச்சாமியின் வெற்றியை தனது கெளரவமாக பார்க்கிறார் ஸ்டாலின். இதனால் அங்கு அவர் இன்று தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
ஏற்கனவே வேலுச்சாமியை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி கடந்த வாரம் பொதுக் கூட்டத்தில் பேசினார்.
திறந்த வேனில்
அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வேட்பாளர் வேலுசாமிக்கு ஆதரவு திரட்டி இன்று தீவிர பிரசாரம் செய்கிறார். அவர் திறந்த வேனில் சென்று மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
மாலையில் மேலூரில்
இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை 3.30 மணிக்கு மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்காலக்குடியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் தொடங்குகிறார். தொடர்ந்து மேலூரில் 4 மணிக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்.
ஒத்தக்கடை- புதூர்
ஒத்தக்கடையில் 4.15 மணிக்கும், புதூரில் 4.40 மணிக்கும், பீ.பி.குளத்தில் 4.45 மணிக்கும், செல்லூரியில் மாலை 5 மணிக்கும் திறந்த வேனில் சென்று வேட்பாளர் வேலுசாமிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டுகிறார்.
இஸ்மாயில்புரம்- பழங்காநத்தம்
5.30 மணிக்கு இஸ்மாயில்புரம் பகுதியிலும், 6 மணிக்கு காமராஜர்புரத்திலும், 6.15 மணிக்கு ஜெய்ஹிந்த்புரம், 6.30 மணிக்கு பழங்காநத்தம், 6.45 மணிக்கு காஜிமார் தெரு, இரவு 7.15 மணிக்கு ஆரப்பாளையம், 7.30 மணிக்கு பெத்தானியாபுரம் ஆகிய பகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
ஆணையூரில் இரவில் பொதுக்கூட்டம்
13 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்யும் அவர், இரவு 8 மணிக்கு ஆணையூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தளபதி தலைமையில் ஏற்பாடுகள்
மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை தி.மு.க. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தளபதி, மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.