கருத்து கணிப்புகள் ஜெயலலிதாவுக்கு பயந்து வெளியிடப்பட்டவை- மு.க.ஸ்டாலின்
திருச்சி / சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஜெயலலிதாவுக்கு பயந்து வெளியிடப்பட்டவை. அவை கருத்து திணிப்புகள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேர்தல் வாக்குப் பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்பை யாரும் ஏற்கவில்லை. 16-ந்தேதி தான் உண்மை தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருச்சியில் மறைந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், திருச்சி சிவா எம்.பி., சுகவனம் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.
இதன் பிறகு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
கேள்வி: லோக்சபா தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்ததா?
பதில்: தேர்தல் ஜனநாயக முறைப்படி அல்ல, பண நாயக முறைப்படி தான் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். இதற்கு தேர்தல் ஆணையமும் மிகுந்த ஆர்வம் காட்டி ஒத்துழைப்பு தந்துள்ளனர். ஆளுங்கட்சி பணத்தை விநியோகம் செய்ய வசதியாக தேர்தல் ஆணையம் 144 தடை உத்தரவு போட்டு எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் உதவி செய்துள்ளது என்பது பகிரங்க குற்றச்சாட்டாக உள்ளது.
கேள்வி: கருத்துக் கணிப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஸ்டாலின்: கருத்துக் கணிப்பு முதல்வர் ஜெயலலிதாவின் மிரட்டலுக்கு அஞ்சி கருத்து கணிப்பாக இல்லாமல் திணிப்பாக உள்ளது. இதை தொண்டர்கள், யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 16-ந்தேதி தான் இதன் உண்மை தெரியும்.
கேள்வி: மத்தியில் ஆட்சி அமைக்க யார் ஆதரவு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளதே? ஸ்டாலின்: இதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது
கேள்வி: லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
ஸ்டாலின்: நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
கேள்வி: தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எப்படி உள்ளது?
ஸ்டாலின்: அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். இதில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்" என்றார்.