மவுலிவாக்கம் கட்டிட விபத்து: சி.பி.ஐ. விசாரணை கோரி மு.க. ஸ்டாலின் வழக்கு
சென்னை: சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மவுலிவாக்கத்தில் கடந்த ஜூன் 28-ந் தேதியன்று 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், விபத்து நடந்த கட்டிடத்துக்கு அனுமதியளித்ததில் முறைகேடு நடந்துள்ளது. இதனால், இப்போது நடைபெறும் விசாரணை உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தக் கட்டிட விபத்தில் தொடர்புடையவர்களைக் கண்டறிய சி.பி.ஐ.யின் சுதந்திரமான விசாரணை தேவை. விபத்து நடந்த மவுலிவாக்கத்தில் 6 மாடிக் கட்டிடம் மட்டுமே கட்ட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 11 அடுக்கு மாடிக் கட்டடம் கட்டியுள்ளனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு பூமி பூஜை நடத்தப்பட்டதில் சில அமைச்சர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். இதனால் அதிகாரிகள் யாரும் இந்த கட்டிடத்தை ஆய்வு செய்யவில்லை. இதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.