ஜெயலலிதா ஹெலிகாப்படரிலேயே செல்வது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!
கரூர்: பொதுமக்களின் மறியலுக்கு அஞ்சியே முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்படரிலேயே பயணம் செய்து பிரசாரம் செய்து வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ம.சின்னசாமியை ஆதரித்து பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மு.க.ஸ்டாலின் வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து கரூரில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
குடிநீர் பிரச்சினை
தமிழகத்தில் கடும் குடி நீர் பற்றக்குடி நிலவி வருகின்றது. நான் கடந்தி ஒரு மாதமாக தமிழகம் முழுக்க சுற்றி வருகின்றேன். செல்லும் இடம் எல்லாம் மக்கள் குடி நீர் பிரச்சனையைத் தான் முன்வைக்கின்றனர்.
இலவச குடிநீர்
இந்த அரசால் மக்களுக்கு குடி நீர் கூட வினியோகம் செய்ய முடியவில்லை. ஆனால், நான் முதல்வர் ஆனால் , 20 லிட்டர் பாதுகாப்பட்ட குடி நீர் வழங்குவேன் என அந்த அம்மையார் கூறினார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு லிட்டர் குடி நீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
மின்வெட்டு பிரச்சினை
அதே போல, ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் மின்வைட்டை அறவே நீக்கிவிடுவேன். தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என ஜெயலலிதா கூறினார். ஆனால் இன்று நிலை என்ன ஒரு நாளைக்கு சுமார் 6 முதல் 12 மணி நேரம் மின் வெட்டு உள்ளது.
விரட்டும் மக்கள்
அதனால் தான், அ.தி.மு.க.வேட்பாளர்களை பொது மக்கள் தொகுதிக்குள் வரவிடாமல் துரத்தி துரத்தி விரட்டியடிக்கின்றனர். பதில் கூற முடியாமல் அதிமுக வேட்பாளர்களும், அமைச்சர்களும் கூனிக் குறுகிப்போய் ஓடி விடுவதை கண்கூடாக பார்க்கின்றோம். இப்படி ஒரு நிலை இதுக்கு முன்பு பார்த்துள்ளோமா
நலத்திட்ட பட்டியல்
தி.மு.க., ஆட்சியில் ஒவ்வொரு தொகுதியிலும் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என, நாங்கள் பல முறை பட்டியல் போட்டி சொல்லியுள்ளோம். அதே போல் முதல்வர் ஜெயலலிதாவால், செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியில் போட்டு சொல்ல முடியுமா, திராணி இருக்கின்றதா, அல்லது உண்மையைச் சொல்ல தெம்பு தான் இருக்கின்றதா
மக்கள் பிரச்சினை
மக்கள் பிரச்னைகள் மட்டும் அல்ல திட்டங்களிலும் கவனம் செலுத்தாதவர் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், அவரது அமைச்சர்கள், தமிழகத்தின் பண்பாடு என்று போற்றப்படும் கலாசாரத்தை வணக்கம் என்ற பெயரில் சீரழித்து வருகின்றனர்.
காலில் விழும் அமைச்சர்கள்
நாகரிகமே இல்லாமல் அமைச்சர்கள், பொது இடங்களில் முதல்வர் காலில் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து கிடப்பதை பார்த்து இந்தியாவே கேலி பேசுகின்றது. ஏன் உலக அரங்கிலியே கேலியாக சிரிக்கின்றனர். இதனால், தமிழர்களுக்கு பெரும் தலை குனிவு ஏற்பட்டுள்ளது.
கஷ்டம் தெரியாத முதல்வர்
தமிழகத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணம், , விலை வாசி உயர்வு என பல பிரச்சனைகளால் பொது மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். ஆனால், முதல்வர் மக்கள் கஷ்டம் தெரியாமல், ஹெலிகாப்டரில் பறந்து பறந்து செல்கிறார். இது தான் அவரது சாதனை.
ஜெ.வுக்கு அச்சம்
ஏன் அவர் காரில் செல்லாமல் ஹெலிகாப்படரில் செல்கின்றார் தெரியுமா , கடும் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் அமைச்சர்கள் , வேட்பாளர்களை மறிப்பது போல், அவரையும் மறித்துவிடுவார்கள் என்ற பயம் காரணமாக தான் ஹெலிகாப்படரில் பயணம் செய்கின்றார் என்றார் மு.க.ஸ்டாலின்.