ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: ஜெ.க்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த விஜயகாந்த்
விழுப்புரம்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியதாக முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டு வருவது பொய் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயனடையும் வகையிலான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டதாகவும் தமது அரசே நிறைவேற்றியதாகவும் முதல்வர் ஜெயலலிதா தமது பிரசார கூட்டங்களில் கூறி வருகிறார்.
ஆனால் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாததால் தருமபுரி- கிருஷ்ணகிரியில் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்று மு.க.ஸ்டாலினும் விஜயகாந்தும் சாடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது:
திமுக ஆட்சியில் ஒகேனக்கல் திட்டம்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு 26-02-2008 அன்று தருமபுரிக்கு நேரில் சென்று கருணாநிதி அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினார். அதன் பின்னர் துணை முதல்வர் என்ற முறையில் கிட்டதட்ட 20 - 25 முறை இந்த இரு மாவட்டங்களுக்கும் நான் நேரடியாக சென்று ஆய்வுப்பணிகளை நடத்தி, பணிகளை மேற்பார்வையிட்டு, விரிவுபடுத்தி, பணிகளை 5 பிரிவுகளாக பிரித்து, 2012 டிசம்பர் மாதத்துக்குள் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வரைமுறை படுத்தி, கால அட்டவணை வகுத்து பணிகளை முடுக்கி விட்டேன்.
அதிமுக ஆட்சியில்...
ஆனால் இடையில் 2011ம் ஆண்டு தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் வந்தது. முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? திட்டத்தை விரைந்து முடித்திருக்க வேண்டாமா, இல்லையா ? ஆனால் கிடப்பில் போட்டார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை சென்னை கோட்டையில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முழுமையாக தண்ணீர் வரவில்லையே..
அப்படி வீடியோ மூலம் இந்த திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தது 29-05-2013 அன்று. ஒரு ஆண்டு முடிந்துள்ளது, இப்போதாவது அப்பகுதி மக்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கிறதா என்றால் இல்லை.
நிரூபிக்க தயாரா?
இதை கிருஷ்ணகிரியில் 10 நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்துக்கு சென்றபோது நான் எடுத்துரைத்தேன். அதுமட்டுமல்ல அப்படி தண்ணீர் கிடைக்கிறது என்றால், அதேபகுதியை சேர்ந்த கே.பி.முனுசாமி இப்போது உள்ளாட்சி துறையின் அமைச்சராக உள்ளார், எனவே அவரும் வரட்டும், நானும் வருகிறேன், அவர் தண்ணீர் வந்தது என நிரூபிக்கட்டும், நானும் நிரூபிக்கிறேன் தண்ணீர் வந்ததா, இல்லையா என்று குறிப்பிட்டேன்.
வரச்சொல்லுங்கள்.. வருகிறேன்..
இதை நான் தவறான தகவல் தருவதாக ஜெயலலிதா தெரிவித்து இருக்கிறார். அவரை நான் பணிவோடு கேட்டு கொள்கிறேன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் தண்ணீர் கிடைக்க வில்லை என இந்த தியாக துருகத்தில் இருந்து நான் சொல்கிறேன். அந்த மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தாலுகா, ஒன்றியத்தில் 35 பஞ்சாயத்துக்களில் தண்ணீர் வரவில்லை. அதேபோல சூளகிரி, பர்கூர், அரூர் ஆகிய ஒன்றியங்களில் சுத்தமாக தண்ணீர் வரவில்லை. கிருஷ்ணகிரி நகரத்தில் வாரத்துக்கு ஒருநாள் தண்ணீர் வருகிறது. ஓசூர் ஒன்றியத்தில் சுத்தமாக தண்ணீர் வரவில்லை. ஓசூர் நகரத்தில் உள்ள 45 வார்டுகளில் ஓரிரு வார்டுகள் தவிர மீதமுள்ள வார்டுகளில் சுத்தமாக தண்ணீர் கிடைக்கவில்லை.
அதோடு மட்டுமல்ல இந்த திட்டம் தொடங்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள பென்னாகரம், அங்காவது ஒரு சொட்டு தண்ணீர் வருகிறதா என்றால் இல்லை. ஆக இரு மாவட்டங்களில் 75% பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. நான் சொன்னது உண்மை என்று நிரூபிக்க நான் தயார். இதற்காக எனது பிரச்சாரத்தை ஒதுக்கி வைத்து விட்டு கிருஷ்ணகிரிக்கு வரத் தயார். முதலமைச்சரை கூட நான் அழைக்கவில்லை, அவர்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க அவரது உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி வரத் தயாரா என்பதற்கு ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
விஜயகாந்த்
இதேபோல் கிருஷ்ணகிரியில் பிரசாரம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்தும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியதாக அதிமுக அரசு கூறுகிறது..அப்படியானால் கிருஷ்ணகிரியில் ஏன் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
நல்ல கூட்டணி!