பாஜகவின் ராமர் கோயில் பற்றியும் ஜெ. பேச வேண்டும்: ஸ்டாலின் அடுத்த கிடுக்கிப்படி
சென்னை: பாஜக தேர்தல் அறிக்கையில் மீனவர் பிரச்சனை, ஈழப் பிரச்சனை பற்றி இல்லை என்று சொல்லும் முதல்வர் ஜெயலலிதா ராமர் கோயில் கட்டுவோம், பொதுசிவில் சட்டம் கொண்டுவருவோம் என சொல்லப்பட்டிருப்பது பற்றி ஏன் பேசவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோட்டில் திமுக வேட்பாளர் பவித்திரவள்ளியை ஆதரித்து ஸ்டாலின் நேற்று பேசியதாவது:
இன்று அம்மையார் ஜெயலலிதா வேலூர், ஆரணி நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்தபோது, பாரதிய ஜனதா பற்றி விமர்சிப்பதாக எண்ணி கொண்டு, அவர்களது தேர்தல் அறிக்கையில் இலங்கை பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து எதுவும் இல்லை என்று ஒரு வாதத்தை எடுத்து வைத்துள்ளார்.
என் பேச்சை பார்க்கும் ஜெ.
ஆனால் கரூரில் இதையெல்லாம் குறிப்பிடாமல், காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி மட்டுமே பேசினார். நான் நாமக்கல்லில் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி ஒரு கேள்வியை கேட்டேன். ஆக நான் பேசியதை நீங்கள் பார்கிறீர்களோ இல்லையோ, ஜெயலலிதா கலைஞர் தொலைக்காட்சியில் பார்க்கிறார் என நான் நம்புகிறேன்.
ஜெ. விளக்கம் அளிக்க வேண்டும்
வேலூர், ஆரணியிலே பேசிவிட்டு ஹெலிகாப்டரில் சென்று போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இப்போது கூட என் பேச்சை கேட்டு கொண்டு இருப்பார் எனக் கருதுகிறேன். எனவே அவர் எனக்கு ஒரு விளக்கம் அளிக்க வேண்டும்.
ராமர் கோயில் பற்றி பேசும் சக்தி உண்டா?
பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் இலங்கை பிரச்சினை, மீனவர் பிரச்சினை, காவிரி பிரச்சினை பற்றி இல்லை என்று பேசுகிறாரே, அதே அறிக்கையில் ராமர் கோயில் கட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதே, அதை பற்றி பேசும் சக்தி ஜெயலலிதாவுக்கு வருமா ? என்றால் வராது.
ராமருக்கு கோயில் கட்டுங்கள்..ஆனால்
ராமர் யார் ? அவர் கடவுள், மறுக்கவில்லை. அவருக்கு எங்கு வேண்டுமானாலும் கோயில் கட்டி கொள்ளுங்கள், எங்களுக்கு அது பற்றி கவலையில்லை. தலைவர் கலைஞர் பராசக்தி படத்தில் குறிப்பிட்டு இருப்பாரே, " கோவில்கள் இருக்கக் கூடாது என்பதல்ல, கோவில்கள் கொடியவர்களின் கூடாரங்களாக மாறி விடக் கூடாது என்பதே எங்கள் கொள்கை ", என்று எழுதியிருப்பாரே, அதுதான் திமுகவின் கொள்கை. ஆக ராமர் கோயிலை கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.
மசூதி இடித்து விட்டு கோயிலா?
ஆனால் 400 ஆண்டுகால பழமை வாய்ந்த பாபர் மசூதியை இடித்து விட்டு, அந்த இடத்தில் கோயில் கட்டுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை குறிப்பிட்டு உள்ளார். இதே ராமர் கோயிலை திட்டமிட்டு, சதி செய்து பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ். உடன் இணைந்து அந்த செயலில் ஈடுபட்டு, மசூதியை இடித்தபோது, அதனை எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலாக குரல் கொடுத்தவர் யார் என்றால் தலைவர் கலைஞர் அவர்கள்.
கரசேவையை ஆதரித்த ஜெ.
அதே நேரத்தில் கரசேவையை ஆதரித்து இந்தியாவிலே முதல் ஆதரவு தெரிவித்தவர், அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த அம்மையார் ஜெயலலிதா என்பதையும் நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். அதை டெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டத்திலும் வலியுறுத்தினார்.
வழக்கு போட தயாரா?
நான் இங்கு குறிப்பிட்டு இருப்பது தவறு என்றால், என் மீது வழக்கு போடுங்கள், அதை நீதிமன்றத்தில் சந்திக்க தெம்பாக, துணிச்சலாக நான் காத்திருக்கிறேன். ஜெயலலிதாவை போல வாய்தா மேல் வாய்தா வாங்கி கொண்டு இருக்க மாட்டேன்.
இடதுசாரிகளை கழற்றிவிட்டது ஏன்?
நான் இன்னும் கேட்க விரும்புவது, திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி உள்ளது. அதேபோல பாஜக தலைமையில் ஒரு கூட்டணி உள்ளது. அப்படி ஜெயலலிதாவும் அதிமுக தலைமையில் இடதுசாரிகளை இணைத்து ஒரு கூட்டணி அமைத்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் இரு இடதுசாரி கட்சிகளையும் கழட்டி விட்டனர். என்ன காரணம் ?
கழட்டிவிட்டதற்கு தொகுதி பிரச்சனையா காரணம்?
ஒரு கூட்டணியில் இருந்து ஒரு விலகினால் தொகுதி பங்கீட்டில் பிரச்சினை, தொகுதி எண்ணிக்கையில் பிரச்சினை எனப் பல காரணங்கள் இருக்கும். ஆனால் இது போன்ற பிரச்சினை எதுவும் இல்லாமல், திடீரென்று அதிமுகவின் அமைச்சர்கள் இடதுசாரி கட்சியினரை சந்தித்து, " நண்பர்களாக இருந்தோம், நண்பர்களாகப் பிரிவோம் ", என்று சொல்லிவிட்டு கூட்டணியில் இருந்து அவர்களை கழட்டி உள்ளனர்.
பாஜகவுடன் உறவு
பாஜகவுடன் இணைந்து செயல்படவே இந்த செயலிலில் அதிமுக இறங்கியது என்று நான் மட்டுமல்ல, அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ள இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்து வருகிறார்களே. எனவே பாஜகவுக்கும் அதிமுக வுக்கும் ரகசிய உறவு உள்ளது என்றுஅழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.