டிசி குடுங்க, இல்லாட்டி தற்கொலை செய்துக்க அனுமதி கொடுங்க – மாணவரின் விபரீத மனு
நாமக்கல்: நாமக்கல்லில் மாற்றுச் சான்றிதழைக் கொடுக்க கல்லூரி மறுப்பதால் தற்கொலைக்கு அனுமதி கோரி மனு அளித்துள்ளார் மாணவர் ஒருவர்.
நாமக்கல் மாவட்டம், திப்பிரமாதேவியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் குடும்ப நிலைமை காரணமாக மோகன்ராஜ் படிப்பை பாதியில் விட நேர்ந்தது. தற்போது வேலைக்குச் செல்லும் அவர் தனக்கு மாற்றுச் சான்றிதழ் அளிக்கக் கோரி கல்லூரியில் விண்ணப்பித்து இருந்தார்.
கிட்டதட்ட 5 மாதங்களாக அவருக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் கல்லூரி நிர்வாகம் அலைக்கழிப்பு செய்து வருகின்றது. இதனால் மனமுடைந்த மோகன்ராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக பொறியியல் படிப்பை தொடர இயலவில்லை. நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் பள்ளிச் சான்றிதழ் தேவை. ஆனால், கல்லூரி நிர்வாகத்தினர் மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.
ஒன்று கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து மாவட்ட நிர்வாகம் மாற்றுச்சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும். இல்லையெனில், நான் தற்கொலை செய்து கொள்ள கருணை அடிப்படையில் அனுமதி தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட வருவாய் அலுவலர் இந்தப் பிரச்னை மீது நடவடிக்கை எடுக்கத் கல்வித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இம்மனு வருவாய்த்துறை அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.