இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியை- மாணவன் கண் பார்வை பாதிப்பு!
கும்பகோணம்: கும்பகோணம் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியை அடித்ததால் சிறுவன் ஒருவரின் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தின் அருகே அமைந்துள்ள திருப்புறம்பியத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.
இப்பள்ளியில்தான் ஆசிரியை ஒருவர் இக்கொடூரச் செயலை செய்துள்ளார்.
350 மாணவர்கள்:
பிரி.கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 7 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளனர்.
2 ஆம் வகுப்பு ஆசிரியை:
இப்பள்ளியின் 2 ஆம் வகுப்பில் ஆசிரியை அருள்ஜோதி என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
பேசிக் கொண்டிருந்த மாணவர்கள்:
இவர் கடந்த புதன்கிழமை மதியம் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது வகுப்பறையில் மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
இரும்பு ஸ்கேல்:
இதில் ஆத்திரமடைந்த ஜோதி, கையில் இருந்த ஒரு அடி நீள இரும்பு ஸ்கேலை வகுப்பறையில் மாணவர்களை நோக்கி வீசியெறிந்துள்ளார்.
கண்ணில் அடி:
இதில் திருப்புறம்பியத்தை அடுத்துள்ள குடிதாங்கியை சேர்ந்த செழியன் என்பவரின் மகன் இளமாறன் என்ற மாணவரின் கண்ணில் அடிபட்டு அவரது கண்ணின் கருவிழி பலத்த சேதமடைந்தது.
மருத்துவமனையில் அனுமதி:
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் செழியன் பள்ளிக்கு சென்று காயமடைந்த தனது மகனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு இளமாறனின் கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பெற்றோர் முற்றுகை:
இதைத்தொடர்ந்து ஏராளமான பெற்றோர் பள்ளி முன்பு திரண்டு முற்றுகையிட்டதால் பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு:
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆசிரியையை தேடி வருகின்றனர்.