மோடி வருகையை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்- போலீஸுடன் தள்ளுமுள்ளு
சென்னை: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.
சென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர்.
ஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.