ராஜபக்சேவுடன் கூட்டு.. அப்பட்டமாகப் புளுகுகிறார்கள் லைக்காகாரர்கள்! - மாறன் குற்றச்சாட்டு
இனப்படுகொலையாளன் ராஜபக்சேயுடனான வர்த்தக உறவையும், தொடர்புகளையும் அப்பட்டமாக மறைத்து பொய் கூறுகின்றனர் லைக்கா நிறுவனத்தினர் என்று முற்போக்கு மாணவர் முன்னணியின் தலைவரான மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ளதாவது:
லைக்கா சுபாஸ்கரன் வருவார் அவரிடம் கேளுங்கள் உங்களுக்கும் மகிந்தவுக்கும் என்ன தொடர்பு என்று அவர் சொல்லுவார் என 'ஒரு'சிலர் கூறினார்கள். கூறியது போல் வந்தார்..!!!!! ( அவர் கண்டிப்பாக வருவார் என 'அந்த ஒருவருக்கு' எப்படி தெரியும் என என்னிடம் கேட்காதீர்கள். ஏனெனில் அவர்கள் இருவரும் சந்தித்ததோ பேசியதோ இல்லை என்பது அவர் அறிக்கை)
அவர் சொல்லியது போல் லைக்கா சுபாஸ்கரனும் வந்தார் - சொல்லி வைத்தது போல் தனக்கும் ராஜபக்சவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். அதைச் சில பலர் தூக்கி பிடித்து விளம்பரம் செய்கின்றார்கள், செய்யட்டும்.
அப்பட்டமான பொய்
என் கேள்வி - லைக்காவுக்கும் இலங்கைக்கும் எவ்வித தொழில் உறவுகளும் இல்லை என்றால், ஏன் இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு பல கோடிகளை வழங்கியது?
பிரிட்டிஷ் எம்.பி லண்டன் பாராளுமன்றத்தில் ராஜபக்ச குடும்பத்துடன் வியாபாரம் செய்யும் லைக்கா ஏன் உங்களுக்கு அதிகமான நன்கொடைகளை தந்தது? என்ற குற்றச்சாட்டை அப்படியே மேடையில் மறைத்து, இல்லை இல்லை பிரித்தானியா எம்.பி அதிக நன்கொடை லைக்காதான் தந்தது என்று மட்டும் குற்றம் சுமத்தினார் என அப்பட்டமாக பொய் கூறினார்கள்.
எம்பியின் கடிதம்
ராஜபக்சவுடன் தொடர்பு உள்ளது என பிரித்தானியா எம்.பி கூறவேயில்லையாம். எம்.பியின் கடிதத்தைப் பாருங்கள். அந்த உண்மையை ஏன் அப்பட்டமாக மறைக்க வேண்டும்? பிரிட்டிஷ் எம்.பி கூறியது பொய் என சொல்லியிருந்தால் கூட, இவர்களின் பல பொய்களில் இதுவும் ஒன்று என இருந்திருக்கலாம். ஆனால் ஏன் பிரிட்டிஷ் எம்.பி ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டை கூறவேயில்லை என மறைக்க வேண்டும்.
மிஸ்டர் ராஜபக்சேவாம்!
சுபாஸ்கரன் கேட்கின்றார், தமிழகத்தில் ஏன் ராஜபக்ச படம் தயாரிக்க வேண்டும்? ராஜபக்ச ஏன் தமிழ்ப் படம் எடுக்க வேண்டும், அவர் விஜய் படம் மூலம்தான் உழைக்க வேண்டுமா? ராஜபக்ச... மிஸ்டர் ராஜபக்ச!!!!! |( மிஸ்டர் ராஜபக்ச என்று திருத்திச் சொன்னதைக் கவனிக்கவும். ) அப்படியென்றால் ஏன் ஹிந்திப் படம் எடுத்திருக்கக் கூடாது? ராஜபக்ச பணம் தந்துதான் நான் படம் தயாரிக்க வேண்டும் என இல்லை தன்னிடம் போதுமான பணம் உள்ளதாம். ( ஆனால் இந்தக் கேள்வியை வேறு யாரோ அடிக்கடி மீடியாவில் கேட்ட ஞாபகம் - ஒரே மாதிரியே இருக்குதே)
சுபாஸ்கரன், கேளுங்கள் ராஜபக்சவின் பணத்தில் படம் தயாரிப்பதாக எவரும் கூறவில்லை, ராஜபக்சவுடன் தொழில் கூட்டு வைத்திருப்பதால்தான் எதிர்க்கின்றார்கள்.
விளம்பரத்துக்காக போராட்டமாம்
ஏன் உங்களுக்கு எதிராக போராட்டம் நடக்கின்றது? இது கேள்வி. போராடும் அமைப்புகள் விளம்பரத்துக்காக போராடுகின்றார்களாம். (அமைப்புகளே இதை கொஞ்சம் கவனிங்க).
இலங்கை சென்றது ஏன்?
அரசியல் விருந்தினர்களாக நாங்கள் இலங்கை செல்லவில்லை என்கிறார் சுபாஸ்கரன். அப்படியென்றால் என் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி விமானம் இறங்கியவுடன் அங்கு வந்து உங்களை கை கொடுத்து வரவேற்க வேண்டும்?
புலம்பெயர் நாடுகளில் ஏன் சிங்கள நிகழ்வுகள், சிங்கள சுதந்திர தினங்கள், சிங்கள விளையாட்டு நிகழ்வுகளுக்கு பல ஆயிரம் பவுண்ஸ்களை அள்ளி வழங்குகின்றீர்கள் அதுவும் தமிழனாக இருந்துகொண்டு?
ராஜபக்ச கட்சி எம்பி ஜெயசூர்யா
பல ஆண்டுகள் முன்பு இலங்கையை விட்டு வெளியேறிய உங்களுக்கு, எப்படி ராஜபக்சவின் கட்சி எம்.பி ஜெயசூர்யா நண்பரானார்? ஏன் அவரை இலங்கை, பிரிட்டன் என அனைத்து நாட்டு நிகழ்வுகளுக்கும் அழைத்துச் செல்கின்றீர்கள்? அதன் ரகசியம் என்ன? அந்த ஜெயசூர்யாதான் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளை வெற்றி விழாவாக கொண்டாடும் ஏற்பட்டுக்குழுவின் முக்கிய உறுப்பினர் என்பது தெரியுமா தெரியாதா?
சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் - ஸ்கை நெட்வொர்க்
சிறிலங்கன் ஏயர் லைன்சுடன் ஏன் வியாபாரம் செய்கின்றீர்கள் என்ற கேள்விக்கு... பல ஏயர் லைன்சுடன் வியாபாரம் செய்கின்றோம் சிறிலங்கா ஏயர் லைன்சுடன் செய்வது மட்டும் என்ன தப்பு என்கிறார்.
ராஜபக்சவின் குடும்பம் ஆதிக்கம் செலுத்தும் ஸ்கை நெட்வெர்க் நிறுவனம் உங்கள் லைக்கா பெயரில்தான் 90 வீதத்திற்கு மேலான பங்குகளை கொண்டிருப்பதாக பதிவே உள்ளது அப்படி இருந்தும் லைக்காவுக்கு எவ்வித தொழில்களும் இலங்கையில் இல்லை என்பது எவ்வளவு அப்படிட்டமான பொய்!
இல்லாத லைக்காவுக்கு ஏன் இலங்கையில் விளம்பரம்?
இலங்கையில் லைக்காவுக்கு வியாபாரமே இல்லை என்கின்றீர்கள். இலங்கையில் இல்லாத லைக்கா நிறுவனம் ஏன் லைக்கா மொபைல் என்ற பெயரில் கொழும்பில் நடைபெற்ற சிறிலங்கா வால்க் என்ற நடைபயணத்திற்கு தனித்துவமான ஆதரவு வழங்கி பலகோடிகளை ஏன் வழங்கியது அதுவும் லைக்காவின் நிர்வாக இயக்குனரையும் அனுப்பி நடக்க வைத்தது?
சிறிலங்காவில்தான் லைக்கா நிறுவனமே இல்லையே பின்பு ஏன் அங்கு லைக்கா மொபைலுக்கு விளம்பரம் செய்தீர்கள்? வியாபாரமே இல்லாத இலங்கையில் பல கோடி செலவு செய்து ஏன் லைக்கா மொபைலுக்கு விளம்பரம் செய்தீர்கள் என சொல்ல முடியுமா?
உதவி செய்ததிலும் வியாபார நோக்கம்
மக்களுக்கு உதவிகள் செய்ததை மட்டும் அங்கு படமாகவே போட்டுக் காட்டியுள்ளார்கள். தன் சொந்த இனத்திற்கு உதவிகள் செய்துவிட்டு அதை படமாக போட்டுக்காட்டி வியாபாரம் செய்தவர்கள் இவர்களாத்தான் இருப்பார்கள். அப்படியே பொதுநலவாய மாநாட்டிற்கு நிதி வழங்கியது, சிங்கள பிக்குகள் கொண்டாடிய சிங்கள சுதந்திர தினம் மற்றும் சிங்கள நிகழ்வுகளுக்கு விளம்பரம் வழங்கியது, வியாபாரமே இல்லாத இலங்கையில் லைக்காவுக்கு பல கோடி செலவில் விளம்பரம் தேடியது, ஸ்கை நெட்வெர்க் பங்கு வாங்கியது, இலங்கையில் அதிகாரபூர்வ நிழ்வுகளுக்கு ஆதரவு வழங்கி விளம்பரப்படுத்துவது, இலங்கை உல்லாசபுரி என விளம்பரம் வெளியிட்டு சுற்றுலாவாசிகளை இலங்கை அழைத்து வருவது, சிறிலங்கன் ஏயர் லைன்சுடன் இணைந்து வியாபாரம் செய்வது, சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அவர்களில் வாகனங்களில் சிங்கள இராணுவத்தின் பாதுகாப்புடன் இலங்கையில் வலம் வருவது என அனைத்தையும் உதவி படம் காட்டியது போல் காட்டியிருக்கலாமே தைரியம் இருந்தால்?
லைக்காவின் ஊடகவியலாளர்களா?
ஆக மொத்தத்தில் பல பொய்களை வாய் கூசாமல் அவிழ்த்துவிட்டுள்ளார்கள். கடுமையான கேள்விகளும் ஏதும் பிரஸ் மீட்டில் கேட்கப்படவில்லை. வந்தவர்கள் கேட்கவில்லையா அல்லது வந்தவர்கள் பலர் லைக்காவே ஏற்பாடு செய்த ஊடகவியளாலர்களா? ஆனால் ஒன்று, விஜய்யை விட நன்றாக நடித்தார்கள் லைக்காகாரர்கள்!