கேமராமேன்கள் கண்ணிலிருந்து தப்ப தாவித் தாவி ஓடிய சுபாஷ் பண்ணையார்...!
கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி திண்டுக்கலில் உள்ள தனது வீட்டில் வைத்து தேவேந்திர குல கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியனை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்றது. இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் சுபாஷ் பண்ணையார் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்தார் சுபாஷ் பண்ணையார். அவருக்கு முன்ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 3ம் தேதி திண்டுக்கல் கோர்ட்டில் நேரில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று திண்டுக்கல் கோர்ட்டில் வந்தது. விசாரணையில் சுபாஷ் பண்ணையார் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுலைமான் உசேன், பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முன்னதாக சுபாஷ் பண்ணையார் மிக பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார். 80 ஆதரவாளர்கள் புடை சூழ 10 கார்களில் அவர்கள் கோர்ட்டுக்கு வந்தனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
அவருடன் வந்தவர்கள் கோர்ட் வளாகம் முழுவதும் நின்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதைப் பார்த்தபோது ஏதோ சினிமாப் பட ஷூட்டிங் போலவே காட்சி தந்தது.
மேலும் சுபாஷ் பண்ணையார் விசாரணையை முடித்து வெளியேறியபோது அவரை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றனர். ஆனால் அவரோ, தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஒளிந்தபடியும், தாவித் தாவி ஓடியும் காரில் ஏறிப் பறந்து போய் விட்டார்.