மீனவர் படகுகளை சிறைபிடிக்க சொன்னது நானே: சு.சுவாமி திடுக் பேட்டி! பல இடங்களில் கொடும்பாவி எரிப்பு!!
சென்னை: தமிழக மீனவர்களை விட்டுவிடுங்கள், ஆனால் அவர்களது படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கை அரசுக்கு தான் ஆலோசனை வழங்கியதாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணிய சுவாமி திடுக்கிடும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
நான் கடைசியாக இலங்கை சென்றிருந்தபோது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள், தொழிலாளர்கள் அவர்களை கைது செய்தால் உடனடியாக விடுவித்துவிடுங்கள்.
ஆனால், அவர்களுக்கு படகுகள் அளிக்கும் உரிமையாளர்கள் பணக்காரர்கள். தமிழக மீனவர்கள், தங்கள் கடல் எல்லையில் மீன்வளம் குன்றிவிட்டதாலேயே எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். இதனை யாழ்ப்பான தமிழர்களும் கூறுகின்றனர்.
எனவே, எல்லைதாண்டி மீன் பிடிக்கும் மீனவ தொழிலாளர்களை விட்டுவிடுங்கள், ஆனால் அவர்களது பணக்கார முதலாளிகளின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கைக்கு ஆலோசனை வழங்கினேன்.
அதைத்தான் அவர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
கொடும்பாவி எரிப்பு
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பேட்டிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவியை இன்று எரித்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.