தமிழகத்தில் 2வது நாளாக இன்றும் சு.சுவாமி கொடும்பாவி எரிப்பு!
சென்னை: உளுந்தூர்பேட்டை: தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க இலங்கை அரசுக்கு தானே ஆலோசனை கூறினேன் என்று பேட்டி கொடுத்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் 2வது நாளாக இன்றும் கொடும்பாவி எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கைக்கு நான் சென்ற போது மகிந்த ராஜபக்சேவை சந்தித்து தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அதைத்தான் இலங்கை அரசு தற்போது செய்து வருகிறது என்று கூறியிருந்தார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்துக்கு எதிராக தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் சென்னை கோயம்பேடு, விழுப்புரம் அருகே உளுந்துர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயளாலர் வ.ச.சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் ஞா.ராஜேஷ், ஒன்றிய செயலாளர் க.கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.