ஜெயலலிதா கைதுக்கு கண்டனம் தெரிவித்து வேலூர் சிறையில் தீவிரவாதிகள் உண்ணாவிரதம்
சென்னை: தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆந்திராவின் புத்தூரில் பதுங்கியிருந்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 தீவிரவாதிகளை, சி.பி.சி.ஐ.டி போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றப்பட்டதையடுத்து 3 தீவிரவாதிகளும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர். பின் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த தீவிரவாதி போலீஸ் பக்ரூதின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதலமைச்சருக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை அநீதியானது. துரதிர்ஷ்டமானது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மத்திய அரசு தமிழர்களையும், தமிழக அரசையும் பழி வாங்கும் நோக்கில் செயல்படுகிறது. அதனால்தான் முதலமைச்சருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயினுல்லாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய மூவரும் வியாழக்கிழமை வேலூர் சிறையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க உள்ளனர் என்றார்.