இன்று பிள்ளையார் சுழி போட்ட டி.ஆர்... எதற்கு?
சென்னை: எங்களது கட்சியை தேர்தலைச் சந்திக்கும் அளவுக்குப் பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு அண்ணா பிறந்த நாளான இன்று பிள்ளையார் சுழி போட்டுள்ளோம் என்று லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர். வழக்கம் போல சூடாக, அனல் பறக்கப் பேசினார்.
அவர் பேசுகையில், உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட ஆளும் கட்சியை எதிர்த்து களம் காண்கிறது. ஆனால் பிரதான எதிர்கட்சியான, ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட கட்சியான தி.மு.க. பின்வாங்கியுள்ளது.
தி.மு.க.வை அவர்களால் பலப்படுத்த முடியவில்லையே ஏன்? எதிர்கட்சி அந்தஸ்தை இழந்த விட்ட பிறகு இப்போது தேர்தலில் போட்டியிடுகின்ற எதிர்க்கும் சக்தியையும் தி.மு.க. இழந்து விட்டதா?
எங்கே போனது தி.மு.க.வின் லட்சியம். இதை அந்த கட்சியில் முன்னாள் இருந்தவன் என்ற முறையில் கேட்கிறேன்.
எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும் தமிழ் உணர்வை காட்டக்கூடாது. ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் தமிழ் உணர்வை காட்ட வேண்டும். அது தான் உண்மையான உணர்வு.
சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருக்கிறவர்கள் அங்கு பேச தயங்குகிறார்கள். இன்றைக்கு அண்ணா பிறந்தநாளில் நாங்கள் பிள்ளையார் சுழி போடுகிறோம். தேர்தலை சந்திக்கும் அளவிற்கு எங்கள் கட்சியை அடிப்படையில் இருந்து பலப்படுத்துவோம் என்றார் ராஜேந்தர்.